ஜெயலலிதா கொடநாடு எஸ்டேட்டில் தொடரும் மர்ம மரணங்கள்.. பரபர தகவல் !
கோவை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை, தற்கொலை சம்பவங்கள் அடுத்தடுத்து தொடர்ந்து நடந்துவருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில், 900 ஏக்கரில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட் உள்ளது. இந்த எஸ்டேட்டின் நடுவில், மிகப் பிரமாண்ட அளவில் கொடநாடு பங்களா அமைந்துள்ளது. இங்குள்ள பங்களாவில் ஜெயலலிதா வந்து தங்கி ஓய்வெடுத்து செல்வார்.
பாதுகாப்புகள் நிறைந்த இந்த பங்களாவில் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி 10 ஆம் எண் கேட் அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஓம் பகதூர் கொலைசெய்யப்பட்டார். மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதூரைத் தாக்கிவிட்டு, எஸ்டேட்டில் உள்ள பங்களாவுக்குள் புகுந்த நபர்கள் அங்கிருந்த பொருட்கள், பணம் மற்றும் ஆவணங்களைக் கொள்ளையடித்துச் சென்றார்கள். இந்தச் சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த கொலைச் சம்பவத்தில் தொடர்புடையவர்களைப் பிடிக்க ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டன. பல இடங்களில் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், முக்கிய நபராக, தனிப்படை போலீஸாரால் சந்தேகிக்கப்பட்டவர், கனகராஜ். இவர், போயஸ்கார்டன் முன்னாள் கார் டிரைவர். இவர் கொலை நடந்த சில தினங்களில் ஆத்தூரை அடுத்த சந்தனகிரி தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த கார் மோதி உயிரிழந்தார். கனகராஜ் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது அண்ணன் தனபால் குற்றம்சாட்டியுள்ளார்.
அதே நாளில் கனகராஜின் நண்பர் சயான் விபத்தில் சிக்கினார். மனைவி குழந்தைகள் உயிரிழந்தனர். படுகாயமடைந்த சயான் கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த வழக்கு தொடர்பாக கேரள மாநிலத்தைச் சேர்ந்த தீபு, சதிஷன், சந்தோஷ், உதயகுமார், டீபு, சந்தோஷ், சதீஷன் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பலரும் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கொடநாடு எஸ்டேட் அலுவலகத்தில் கம்யூட்டர் ஆப்ரேட்டராக பணிபுரிந்து வந்த தினேஷ்குமார் என்பவர் தனது வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தொடர்ந்து கொடநாடு எஸ்டேட் தொடர்புடையவர்கள் கொலை செய்யப்படுவதும், விபத்தில் சிக்கி உயிரிழப்பது, தற்கொலை என மர்மம் நீண்டுகொண்டே செல்வது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.