நலங்களும் வளங்களும் பெருகி வெற்றி தரும் விஜயதசமி...
சென்னை: விஜயதசமி பண்டிகை இன்று நாடுமுழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. பள்ளிகளில் இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கோவில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் நெல், பச்சரிசி ஆகியவற்றில் அட்சரம் எழுதி கல்வியை ஆரம்பித்தனர்.
கல்விக்கு உரிய சரஸ்வதி தேவியையும், செல்வத்துக்கு உரிய லட்சுமி தேவியையும், வீரத்துக்கு உரிய பார்வதி தேவியையும் போற்றி வணங்கும் பண்டிகையாக நாடு முழுவதும் உற்சாகமாகவும் பக்தி பெருக்குடனும் நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுகிறது. துர்கா, பத்ரகாளி, அம்பா, ஜகதம்பா, அன்னபூரணி, சர்வமங்களா தேவி, பைரவி, சண்டி, லலிதாதேவி, பவானி, மூகாம்பிகா என சக்தியின் அனைத்து வடிவங்களும் நவராத்திரி நாட்களில் வழிபடப்படுகின்றன.
தேவி ஆதிபராசக்தி ஒன்பது நாள் போற்றப்பட்ட பின், தசமியான பத்தாம் நாள் வெற்றி மங்கையாக, வீரலஷ்மியாக ஆராதிக்கப்படுகிறாள். அன்றைய தினமே ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை. நவராத்திரியின் அனைத்து நாட்களில் மட்டுமல்ல ஆண்டு முழுவதும் தேவியைப் போற்றி அனைத்து நன்மைகளையும் வளங்களையும் பெறலாம். குறிப்பாக தேவியைப் போற்றும் செளந்தர்யலஹரி படிக்க வேண்டும். அந்த சுலோகங்களில் சிலவற்றைப் பொருள் அறிந்து விஜயதசமியான இன்று படித்தால், செளந்தர்யலஹரி சகல சித்திகளும் அளிக்கும் என்பது நம்பிக்கை.
வித்யாரம்பம்
கல்வி, கலைகள் என இந்நாளில் எது தொடங்கினாலும் ஜெயமாக முடியும் என்பது நம்பிக்கை. குழந்தைகளின் கை பிடித்து, பரப்பி வைத்திருக்கும் நெல்லில் ‘அ' என்று எழுத கற்றுக் கொடுப்பது ‘வித்யாரம்பம்' எனப்படுகிறது.
மழலை குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும் பாட்டு, இசைக் கருவிகள் பயிற்சி, நடன பயிற்சி, பிறமொழி பயிற்சி, புதிதாக ஒரு தொழிலை கற்றுக்கொள்வது ஆகியவற்றை இந்த நாளில் தொடங்கினால் சரஸ்வதி தேவியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். இதனையொடடி மயிலாப்பூரில் பல்வேறு கோவில்கள், பள்ளிகளில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான பெற்றோர் தங்களின் குழந்தைகளை அழைத்து வந்து அட்சரம் எழுதி பழக்கினர்.
வெற்றித் திருவிழா
விஜயதசமிக்கு பல சிறப்புகள் இருக்கின்றன. அகில உலகையும் ஆட்டி படைத்த மகிஷாசுரனை அழிக்க தேவியானவள் துர்க்கை வடிவம் எடுத்தாள். 9 நாட்கள் நீடித்த போர், விஜயதசமியன்று முடிவுக்கு வந்தது. தீய சக்தியான மகிஷாசுரனை துர்கா தேவி வதம் செய்தாள். நல்ல சக்தியின் வெற்றி திருவிழாவாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது.
பாண்டவர்களுக்கு சக்தி
ஆட்சி, அதிகாரம், நாடு உள்பட சகலமானதையும் இழந்த பாண்டவர்கள் 12 ஆண்டு வனவாசம், ஓராண்டு மறைவு வாழ்க்கை முடிந்து, விஜயதசமியன்றே மீண்டும் அனைத்து ஆயுதங்களையும் தாங்கள் இழந்த பலம் ஆகியவற்றையும் பெற்றனர் என்று கூறப்படுகிறது.
ராமாயணத்தில் விஜயதசமி
சீதையை தேடிச் சென்ற ராமர், சண்டி ஹோமம் செய்து அன்னை துர்காவின் அருளை பெற்று, ராவணாசுரனை இந்த விஜயதசமி நாளில் வதம் செய்தார். காமம், கோபம், தவறான வழி, பேராசை, கர்வம், பொறாமை, மன கட்டுபாட்டின்மை, ஞானமின்மை, மனஉறுதி இன்மை, அகங்காரம் இந்த பத்து தீய குணங்களே ராவணனின் அம்சமாக கருதப்படுகிறது. அருளின் வடிவமான ராமபிரான் விஜயதசமி நாளில் இந்த பத்து தீமைகளையும் அழித்தார். துர்கா தேவியை மனமுருக பிரார்த்தித்து எந்த செயலையும் தொடங்கினால் தீமைகள் விலகி, நலங்களும் வளங்களும் சேரும் என்பது நம்பிக்கை.
மைசூரு தசரா
உலகப்புகழ் பெற்ற மைசூரு தசரா பண்டிகையும் விஜய தசமி நாளில் தான் கொண்டாடப்படுகிறது. தேவியின் வெற்றியைக் கொண்டாடும் விழாவாகவே தசரா பண்டிகை திகழ்கிறது. மைசூருவில் நடைபெறும் தசரா பண்டிகை ரத ஊர்வலத்தைக் காண இந்தியா மட்டுமில்லாது உலகின் பல்வேறு நாடுகளிலும் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளும் அங்கு கூடுவார்கள்.
குலசை தசரா
மைசூரு தசரா பண்டிகையைப் போன்று தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் நடைபெறும் தசரா பண்டிகையும் மிகப் புகழ்பெற்றது. அங்குள்ள அருள்மிகு முத்தாரம்மன் கோயிலில் இந்த பண்டிகையையொட்டி ஆயிரக்கணக்கானோர் கூடுவார்கள்.