முதல் முறையாக டாடா சாம்ராஜ்யத்தின் தலைவராக ஒரு தமிழர்!
சென்னை: இந்தியாவின் மிகப் பெரிய தொழில் குழுமமான டாடா சன்ஸ் தலைவராக என் சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
100 ஆண்டு பாரம்பர்யம் மிக்க, 100 தொழில் நிறுவனங்களைக் கொண்ட, 7 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள, டாடா குழுமத்தின் தலைவராக ஒரு தமிழர் நியமிக்கப்பட்டுள்ளது இதுதான் முதல் முறையாகும்.
இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து கூகுளில் அதிகம் தேடப்பட்ட பெயர் என் சந்திரசேகரன்தான். சமூக வலைத் தளங்களில் ட்ரெண்டிங்கில் இருப்பதும் இவர் பெயர்தான்.
நடராஜன் சந்திரசேகரன் எனும் என் சந்திரசேகரன் ஒரு பச்சைத் தமிழர். பிறந்தது 1963-ம் ஆண்டு, நாமக்கல் மாவட்டம் மோகனூரில். திருச்சியில் உள்ள மண்டல பொறியியல் கல்லூரி (இப்போது என்ஐடி) யில் எஞ்ஜினீயரிங் முடித்தார்.
1986-ல் கல்லூரிப் படிப்பு முடித்தை கையோடு, 1987-ல் டாடா கன்சல்டன்சி சர்வீஸில் சேர்ந்தார். அவரது அபார திறமையால் படிப்படியாக பதவி உயர்வுகள் பெற்று, 2009, அக்டோபர் 6-ம் தேதி டிசிஎஸ்ஸின் சிஇஓவாகப் பொறுப்பேற்றார்.
கடந்த அக்டோபர் 25-ம் தேதி டாடா சன்ஸ் நிறுவனத்தின் கூடுதல் இயக்குநராகப் பொறுப்பேற்றார். இன்று, ஜனவரி 12, 2017-ல் டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராகியுள்ளார். டாடா குழுமத்தில் பெற்ற பதவிகளைத் தாண்டி, பல்வேறு அமைப்புகள் சந்திரசேகரனைத் தேடி வந்து பதவிகளை அளித்து கவுரவித்தன.
2012-ம் ஆண்டு நாஸ்காமின் ஐடி துறை தலைவராக நியமிக்கப்பட்டார். 2016-ம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கியின் இயக்குநர்களுள் ஒருவராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து 5 முறை, ஆல் ஆசியா எக்ஸிக்யூடிவ் ரேங்கிங் அமைப்பால் சிறந்த சிஇஓவாக தேர்வு செய்யப்பட்டவர் சந்திரசேகரன். பல்வேறு பல்கலைக்கழகங்கள் அவருக்கு டாக்டர் பட்டங்களையும் வழங்கியுள்ளன.