'ஆனந்த யாழை மீட்டிய' கவிஞர் நா. முத்துக்குமாரின் முதலாமாண்டு நினைவு நாள்
மறைந்த திரைப்பட பாடலாசிரியர் நா. முத்துக்குமாரின் முதலாவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
சென்னை: ஆனந்த யாழை மீட்டுகிறாள் என்ற புகழ்பெற்ற பாடலை எழுதிய கவிஞர் நா. முத்துக்குமாரின் முதலாவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கவிஞர் நா.முத்துக்குமார் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 14-ஆம் தேதி காலமானார். இது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இவரது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. தங்கமீன்கள், சைவம் ஆகிய படங்களில் இவர் எழுதிய பாடல்களுக்கு தேசிய விருதுகளை பெற்றார். மிக எளிய நடையில் இவர் ஏராளமான கவிதை நூல்களை எழுதியுள்ளார்.
பட்டாம்பூச்சி விற்பவன், நியூட்டனின் மூன்றாம் விதி கவிதை தொகுப்புகள் மிகவும் பிரபலம். உறவுகள் குறித்து ஆனந்த விகடனில் வெளிவந்த அணிலாடும் முன்றில்... என்ற தொடர் கதையை எழுதினார்.
தற்போது அவர் இந்த மண்ணில் இல்லாவிட்டாலும், அவரது கவிதைகளும், பாடல்களும் நீக்கமற நிறைந்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.