தூத்துக்குடி மாவட்ட திமுகவின் அசைக்க முடியாத சக்தி.. அரசியல் சாணக்கியர் பெரியசாமி
தூத்துக்குடி: முத்துநகரான தூத்துக்குடி மாவட்ட திமுகவில் முடிசூடா மன்னனாக விளங்கியவர்தான் என்.பெரியசாமி. அவரது அரசியல் சாணக்கியத்தனமும், திமுக தலைவர் கருணாநிதியுடன் வைத்திருந்த நல்ல நட்பு தொடர்பும் அவரை உயரமான இடத்திலேயே தொடர்ந்து வைத்திருந்தது.
ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் தனியாகப் பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 1986ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்ட திமுக செயலராக நியமிக்கப்பட்டார் என். பெரியசாமி.
இதையடுத்து, அப்போது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தூத்துக்குடி நகர்மன்றத் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அத்தோடு அவர் அமர்ந்துவிடவில்லை. தனது அரசியல் பயணத்தின் அடுத்தகட்டத்திற்கு செல்ல முனைந்தார்.
முதல் முறை
இதைத் தொடர்ந்து, 1989 பேரவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளராக பெரியசாமி களமிறங்கினார். அதிமுகவில் ஜெயலலிதா அணி, ஜானகி அணி என இரு பிரிவுகள் இருந்ததால், என். பெரியசாமி வெற்றிஎளிதானது. இருப்பினும்கூட அந்தத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்ட ஏ.பி.சி.வீ. சண்முகத்தைவிட 547 வாக்குகள் வித்தியாசத்தில் பெரியசாமி வெற்றி பெற்றார்.
தோல்வியடைந்தார்
இதையடுத்து மீண்டும் இரண்டு ஆண்டுகளில் தேர்தல் வந்தது. அப்போதும், சளைக்கவில்லை பெரியசாமி. மீண்டும் தலைமையிடமிருந்து சீட்டை கேட்டுப்பெற்றார். ஆனால் 1991 தேர்தலில் அதிமுகவை சேர்ந்த வி.பி.ஆர். ரமேஷ் இவரை தோற்கடித்தார். ஆயினும் திமுக தலைமையிடம் இவர் நம்பிக்கையை இழக்கவில்லை. தோல்வி கண்டும் துவளவில்லை.
எளிதான வெற்றி
அடுத்து, 1996 தேர்தலிலும் மூன்றாவது முறையாக தூத்துக்குடி தொகுதியில் வேட்பாளராக களமிறங்கினார் என். பெரியசாமி. அப்போது ஜெயலலிதா ஆட்சி மீதான மக்களின் கோபம் விண்ணை முட்டும் அளவுக்கு இருந்தது. திமுக- தமாகா கூட்டணிக்கு பெரிய அளவில் ஆதரவு நிலவியது. அந்தத் தேர்தலில், 56 ஆயிரத்து 511 வாக்குகள் பெற்று பெரியசாமி வெற்றி பெற்றார்.
மகளை அறிமுகம் செய்தார்
இதையடுத்து, சூட்டோடு சூடாக அந்த காலகட்டத்தில் தனது மகளான கீதா ஜீவனை கட்சிக்கு அறிமுகப்படுத்திய என். பெரியசாமி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பதவியை மகளுக்குப் பெற்றுக் கொடுத்தார். 2001 பேரவைத் தேர்தலில் நான்காவது முறையாக களமிறங்கிய என். பெரியசாமி, அப்போதையை அதிமுக வேட்பாளரான ராஜம்மாள் சாம்ராஜிடம் தோல்வியைத் தழுவினார். இருப்பினும், அதே ஆண்டு நடைபெற்ற நகர்மன்றத் தலைவர் பதவிக்கான தேர்தலிலும் களம் கண்ட அவர், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டேனியல்ராஜிடம் தோல்வியைத் தழுவினார். ஊராட்சிக் குழுத் தலைவராக இருந்த கீதா ஜீவன் உறுப்பினராக வெற்றி பெற்றபோதிலும் போதிய ஆதரவு இல்லாததால் மீண்டும் தலைவராக முடியவில்லை.
மறுத்தாலும் மகளுக்கு வாய்ப்பு
இந்தத் தோல்வியைத் தொடர்ந்து, 2006 பேரவைத் தேர்தலில் பெரியசாமி போட்டியிட தலைமை வாய்ப்பு வழங்க மறுத்தது. ஆனாலும் அசரவில்லை பெரியசாமி. அந்தத் தேர்தலில் மகள் கீதா ஜீவனை வேட்பாளராக்குவதில் வெற்றி பெற்றார் பெரியசாமி. அந்தத் தேர்தலில் கீதா ஜீவன், அதிமுக வேட்பாளர் டேனியல்ராஜைவிட 15,323 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்று முதல் முறையாக சட்டசபைக்கு சென்றார்.
அமைச்சரான மகள்
கீதா ஜீவனுக்கு, சமூகநலத் துறை அமைச்சர் பதவியும் கிடைத்தது. 5 ஆண்டுகளாக அமைச்சராக இருந்தபோதிலும் தொகுதிக்கு பெரிதாக எதையும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்ததால், 2011 ஆம் தேர்தலில் இரண்டாவது முறையாக களமிறங்கிய கீதா ஜீவன் 26,193 வாக்குகள் வித்தியாசத்தில் தற்போதையை சட்டசபை உறுப்பினரான சி.த. செல்லப்பாண்டியனிடம் தோல்வியைத் தழுவினார். இருப்பினும் 2016ல் மீண்டும் போட்டியின்று வென்றார்.
மகனுக்கு லோக்சபா சீட்
இதற்கிடையே, கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வேட்பாளராகும் வாய்ப்பை தனது மகன் என்.பி. ஜெகனுக்கு வாங்கிக் கொடுத்தார் என். பெரியசாமி. திமுக அந்த லோக்சபா தேர்தலில் ஒரு தொகுதியிலும் வெல்லவில்லை என்பதால் ஜெகனும் தோல்வியடைந்தார். ஆனால் 1986ஆம் ஆண்டுக்குப் பிறகு நடைபெற்ற சட்டசபை தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், லோக்சபா தேர்தல் என எந்தத் தேர்தலாக இருந்தாலும் பெரியசாமி குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கே மாறிமாறி வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. அவரை எதிர்த்து திமுகவில் யாரும் அரசியல் செய்ய முடியாத நிலைதான் இருந்தது. இந்த சாணக்கியத்தனத்தை அவரது வாரிசுகள் முன்னெடுத்து செல்வார்களா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.