என்.ஆர். காங்கிரஸ் இறுதி வேட்பாளர் பட்டியல்: ஆள்மாறாட்ட கல்யாண சுந்தரத்திற்கு சீட் மறுப்பு
புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தலில் போட்டியிடும் என்.ஆர். காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களின் இறுதி வேட்பாளர்கள் பட்டியலை, வேட்புமனு தாக்கல் செய்யும் இறுதி நாளில் வெளியிட்டுள்ளார் ரங்கசாமி. இந்த வேட்பாளர் பட்டியலில் ஏற்கனவே எம்.எல்.ஏ.க்களாக உள்ள கல்யாணசுந்தரம், வைத்தியநாதன், கார்த்திகேயன் ஆகியோருக்கு சீட் வழங்கப்படவில்லை.
புதுவை சட்டசபை தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் தனித்து போட்டியிடுகிறது. கடந்த 2 மாதகாலமாக ஆன்மீக பயணம் மேற்கொண்டிருந்த முதல்வர் ரங்கசாமி முதல் கட்டமாக 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்திருந்தார்.
காலாப்பட்டு தொகுதி உட்பட மீதமுள்ள 9 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியல் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். வேட்பாளர்களை அறிவித்து விட்டு தனது வீட்டில் சத்ரு சம்ஹார யாகம் செய்தார்.
அப்போது கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் அங்கே குவிந்தனர். கல்யாணசுந்தரத்துக்கு ஆதரவாக கோஷமிட்ட அவர்கள், வரும் தேர்தலில் அவருக்கு போட்டியிட வாய்ப்பு தர வேண்டும் என்றும் கோரினர். இதனை அடுத்து, வீட்டை விட்டு வெளியே வந்த ரங்கசாமி, முற்றுகையில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்.
9 வேட்பாளர்கள் அறிவிப்பு
இந்த நிலையில் இன்று காலை 9 தொகுதிகளுக்கும் வேட்பாளர் அறிவிக்கப்பட்டது. இதனை கட்சியின் நிறுவன தலைவரும், முதல்வருமான ரங்கசாமி அறிவித்தார்.
காலாப்பட்டு - விசுவநாதன், ஏம்பலம் - லட்சுமி காந்தன், நெட்டப்பாக்கம் - ராஜவேலு, நெல்லித்தோப்பு - பாலாஜி, மணவெளி - சுரேஷ்,
காமராஜ்நகர் - தயாளன், லாஸ்பேட்டை - நந்தா.சரவணன், திருபுவனை - கோபிகா, ஊசுடு - வைத்தியநாதன்.
மாஜி கல்வி அமைச்சர் கல்யாணசுந்தரம்
இந்த வேட்பாளர் பட்டியலில் ஏற்கனவே எம்.எல்.ஏ.க்களாக உள்ள கல்யாணசுந்தரம், வைத்தியநாதன், கார்த்திகேயன் ஆகியோருக்கு சீட் வழங்கப்படவில்லை. ஆள் மாறட்ட சர்ச்சையில் சிக்கி சிறை தண்டனை பெற்றதால் கல்யாண சுந்தரத்திற்கு சீட் மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
10ம் வகுப்பு தேர்வு எழுதிய கல்வி அமைச்சர்
புதுச்சேரியில் ரங்கசாமி தலைமையில் 2011ம் ஆண்டு ஜூன் மாதம் என்ஆர் காங்கிரஸ் ஆட்சி அமைந்தபோது கல்வி அமைச்சராக கல்யாண சுந்தரம் பொறுப்பேற்றார். 8ம் வகுப்பு வரை படித்திருந்த தனித் தேர்வராக 10ம் வகுப்பு தேர்வு எழுத விண்ணப்பித்தார்.
அதன்படி, 2011ம் ஆண்டு செப்டம்பர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் அறிவியல், சமூக அறிவியல் பாட தேர்வு எழுத திண்டிவனத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டது.
கல்யாண சுந்தரம் மறுப்பு
கல்யாண சுந்தரம் தேர்வை எழுதாமல் வேறு நபரை வைத்து எழுதி ஆள்மாறாட்டம் செய்ததாக புகார் எழுந்தது. முழு விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது. விசாரணையில் கல்யாண சுந்தரம் எழுதியதாக கூறப்படும் 10ம் வகுப்பு அறிவியல் விடைத்தாள் மற்றும் கல்யாண சுந்தரத்தின் கையெழுத்து போன்றவை வேறுபட்டு இருந்தது. ஆனால், அறிவியல் தேர்வை தானே எழுதியதாக கல்யாண சுந்தரம் வாதிட்டார்.
ஆள்மாறட்டம் செய்த ஆசிரியர்
அதே நேரத்தில், அவருடைய ஹால் டிக்கெட்டை ஆய்வு செய்தபோது போலி முகவரி கொடுத்தது கண்டு பிடிக்கப்பட்டது. கல்யாண சுந்தரம் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய தேர்வு அறை கண்காணிப்பாளராக இருந்த ஆதவன் என்ற ஆசிரியரின் முகவரி அது என்பதும் தெரிந்தது.
கல்வி அதிகாரி உதவி
சிங்கனூர் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றிய ஆதவன், தேர்வு பணிக்கு தலைமை ஆசிரியரின் ஒப்புதல் இல்லாமலேயே வந்துள்ளார். இதற்கு திண்டிவனம் கல்வி அலுவலக ஊழியர் ரஜினிகாந்த் என்பவர் உடந்தையாக இருந்துள்ளார்.
வழக்குப் பதிவு
விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அளித்த புகாரின் பேரில் கல்யாண சுந்தரம் உள்ளிட்ட மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. போலி ஆவணம் தயாரித்தல், கூட்டுச்சதி உட்பட 8 பிரிவுகளின் கீழ் கல்யாண சுந்தரம், ஆதவன், ரஜினிகாந்த் ஆகிய 3 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த பிரச்னை விஸ்வரூபம் எடுத்ததும் அமைச்சர் பதவியில் இருந்து கல்யாண சுந்தரம் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
உச்சநீதிமன்றத்தில் மனு
திண்டிவனம் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையில் கல்யாண சுந்தரம் ஆஜராகாததால் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. உடனே, உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். ஆனால், சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு உச்சநீதிமன்றம் தெரிவித்து விட்டது. அதன்படி, சென்னை உயர்நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமீன் பெற்று விழுப்புரம் போலீசில் திங்கள்தோறும் கையெழுத்து போட்டு வந்தார்.
சிறை தண்டனை
இந்த வழக்கில் கடந்த 2013ம் ஆண்டு ஜனவரி மாதம் திண்டிவனம் முதலாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சரிதா தீர்ப்பை வாசித்தார். முதலில், போலி ஆவணம் தயாரித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் 3 பேரையும் குற்றவாளிகள் என அறிவித்தார். பின்னர், போலி ஆவணம் தயாரித்த குற்றத்துக்காக 3 பேருக்கும் தலா 2 ஆண்டு சிறைத்தண்டனையும், அந்த ஆவணத்தை பயன் படுத்திய குற்றத்துக்காக 3 பேருக்கும் தலா 2 ஆண்டு சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.
சீட் கொடுக்காத ரங்கசாமி
ஆள்மாறாட்ட வழக்கில் சிக்கி தண்டனை பெற்ற மாஜி அமைச்சர் கல்யாண சுந்தரத்திற்கு காலாப்பட்டு தொகுதியில் சீட் கொடுக்கவில்லை. அதேபோல எம்.எல்.ஏ.க்களாக உள்ள கல்யாணசுந்தரம், வைத்தியநாதன், கார்த்திகேயன் ஆகியோருக்கு சீட் வழங்கப்படவில்லை. இன்று வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் என்பதால் சர்ச்சைக்குரிய தொகுதிகளுக்கான வேட்பாளர்களை கடைசி நாளில் அறிவித்துள்ளார் ரங்கசாமி.