ஓரினச் சேர்க்கையாளர் மகனை திருமணம் செய்ய கட்டாயப்படுத்திய என்.சீனிவாசன்
சென்னை: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவர் சீனிவாசன் தனது ஓரினச் சேர்க்கையாளர் மகன் அஸ்வினை ஒரு பெண்ணை மணந்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்தியுள்ளார்.
பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவர் சீனிவாசனின் மகன் அஸ்வினை பேட்டி கண்டுள்ளது. அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது,
எங்கள் பரம்பரை சொத்தில் என் பங்கை என் தந்தை அளிக்க வேண்டும் என விரும்புகிறேன். அவ்வாறு அவர் சொத்தை பிரித்துக் கொடுத்தால் நான் என் பார்ட்னர் அவியுடன் வாழ்வேன்.
மிரட்டல்
என் தந்தை என்னையும், அவியையும் சிறை பிடித்து வைத்து கொடுமைப்படுத்துகிறார். என்னை அவியை விட்டு விலகி வந்து ஒரு பெண்ணை திருமணம் செய்து குழந்தை பெற்றுக் கொள்ளுமாறு கட்டாயப்படுத்துகிறார்.
சிறைபிடிப்பு
சென்னையில் உள்ள என் தந்தையின் வீட்டுக்கு அருகே உள்ள இடத்தில் என்னையும், அவி முகர்ஜியையும் என் தந்தை சிறைபிடித்து மிரட்டி வருகிறார் என்று அஸ்வின் தெரிவித்துள்ளார்.
கடிதங்கள்
உங்கள் அப்பா உங்களை மிரட்டுவதற்கு என்ன ஆதாரம் உள்ளது என்று கேட்டதற்கு சீனிவாசன் எழுதிய கடிதங்களை அஸ்வின் அந்த செய்தித்தாளிடம் அளித்துள்ளார். அந்த கடிதங்கள் 2007ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை எழுதப்பட்டவை.
மகனே
20.6.2007 அன்று எழுதப்பட்ட கடிதத்தில் சீனிவாசன் கூறியிருப்பதாவது, அஸ், நீ என்னுடைய ஒரே மகன். நானும், உன் அம்மாவும் உன்னை அதிகம் நேசிக்கிறோம். நான் கஷ்டப்பட்டு உழைத்து பணம் சேர்த்து வைத்துள்ளேன். என் வியாபாரத்தை தொடர்ந்து நடத்த வாரிசு வேண்டும். அதனால் நீ ஒரு பெண்ணை திருமணம் செய்து வாரிசை அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
ரூபா மெய்ப்பன்
சாதாரணமான சமூகத்தில் நீ மறுபிரவேசம் செய்ய வேண்டும். நீ மாறாத வரை இந்தியா சிமென்ட்ஸ் போர்டில் ரூபாவை சேர்க்கப் போகிறேன். நான் கூறியபடி மாறிய பிறகு நீயும் போர்டில் சேரலாம் என்று சீனிவாசன் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பதில் கடிதம்
அஸ்வின் எழுதிய கடிதத்திற்கு பதில் கடிதம் எழுதிய சீனிவாசன் அதில் கூறியிருப்பதாவது, உன் நண்பர் அவி ஒரு குற்றவாளி. அவர் சட்டத்தை மீறி போதைப் பொருள் உள்ளிட்ட கெட்ட பழக்கத்தில் மூழ்கியிருப்பவர். உன் தற்போதைய நண்பர் உன் வாழ்வில் வந்ததில் இருந்து உனக்கு ஆகும் அனைத்து செலவுக்கு பணம் அளித்து வருகிறேன். என் செலவில் நீங்கள் களியாட்டம் போடுகிறீர்கள்.
நாசம்
உன் நண்பர் உன்னை கெடுத்துவிட்டார். போதைப் பொருள் பழக்கத்தை அறிமுகப்படுத்தி வைத்து, பாங்காக்கில் களியாட்டம், மும்பையில் அதன் தொடர்ச்சி, அவரைப் போன்ற நபர்களை அறிமுகப்படுத்தி வைத்து உன்னை அவரை சார்ந்து இருக்கும்படி செய்துவிட்டார் என்று கடிதத்தில் தெரிவித்துள்ளார் சீனிவாசன்.
சீனிவாசன்
இந்த கடிதங்கள் பற்றி அந்த செய்தித்தாள் சீனிவாசனை அணுகியபோது, இது தந்தைக்கும், மகனுக்கும் இடையேயான தனிப்பட்ட விஷயம். இது குறித்து நான் ஏன் உங்களிடம் பேச வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.