மறக்க முடியவில்லையே முத்துக்குமாரா... நீதானே எங்கள் பொன் வசந்தம்!
சென்னை: முத்துக்குமார் நினைவலைகள் இப்போதைக்கு ஓயாது.. ஓயும்படியாகவா அவர் பாடல்களைக் கொடுத்து விட்டுப் போயிருக்கிறார்..?
ஒவ்வொரு பாடலும் ஒரு மருந்து.. மனசொடிந்து போன உள்ளங்களுக்கும், காதல் வயப்பட்ட மனங்களுக்கும், நம்பிக்கையிழந்த உள்ளங்களுக்கும இவரது வரிகள் அரு மருந்து...!
சமீப காலத்தில் இவரைப் போல காதலை யாரும் போற்றியதில்லை.. அன்பையும், பாசத்தையும், வாழ்க்கையையும் வரிகளில் போஷித்ததில்லை.
தாவித் தாவி போகும் மேகம்.. (டோணி)
நாளை என்ன ஆகும் என்று அறியாமல்
காலை மாலை வேளை தோறும் தூங்காமல்
அதி காலை நேரத்தில் புது வெளிச்சம் தூரத்தில்
என் அருகில் வந்து என்னை தொட்டு தழுவ... பரவசப்படுத்திய வரிகள் இவை.
அவள் அப்படி ஒன்றும் அழகில்லை (அங்காடித் தெரு)
எத்தனை முறை கேட்டிருப்போம்.. எத்தனை முறை இன்னும் கேட்டாலும்.. தித்திக்கும் காதல் உணர்வுகள் தீ ஜூவாலை போல உள்ளத்தைத் தொட்டுச் சொல்லும்.. தீண்டி விளையாடும்.. வரிகளா இவை... வைரங்கள் போய் பாய்ந்து புதைந்து சதையோடும், உணர்வோடும் உள்ளடங்கிப் போன பாடல் வரிகள்.
வெயிலோடு விளையாடி (வெயில்)
வெயிலை வேடிக்கை பார்த்து குடை பிடித்து ஓடி ஒளியும் கூட்டத்துக்கு மத்தியில் வெயிலுடன் இணைந்த அந்த வாழ்க்கையை இவ்வளவு எதார்த்தமாக யாரும் கொடுத்ததாக எனக்கு நினைவில்லை.
ஆனந்த யாழை மீட்டுகிறாய் (தங்க மீன்கள்)
மகளைப் போற்றும் தந்தை.. மகளுக்காகவே வாழும் தந்தை.. மகளைத் தாலாட்டும் தந்தை.. அத்தனை தந்தைகளும் சேர்ந்து கொண்டாடிய வைர வரிகள்... இந்த வரிகள் எழுதி வந்தவை அல்ல.. நா. முத்துக்குமார் பிரசவித்த வரிகள்...!
சுட்டும் விழிச் சுடரே (கஜினி)
காதலின் மென்மையையும், காதலின் உணர்வையும் அனுபவித்துச் சொன்ன பாடல் இது.
அழகே அழகே
விளக்கிச் சொல்லத் தேவையில்லாத பாடல் இது.. பாடல் வரிகள் அழகா, பாடிய குரல் அழகா, வாயசைத்த அந்தச் சிறுமி அழகா.. எதை ரசிப்பது, எதை விடுவது?
பறவையே எங்கு இருக்கிறாய் (கற்றது தமிழ் எம்ஏ)
ஒரு தேடல் பயணம்.. அதை அழகாக சித்தரித்த வார்த்தைகள்.. வரிகள்.. வாயசைத்த இசைஞானி.. இசையமைத்த யுவன்.. எல்லாம் சேர்ந்து காவியமாக்கியது இந்தப் பாடலை. நா. முத்துக்குமாரின் மறக்க முடியாத பத்துப் பாடல் முத்துக்களைக் கோர்த்தால் அதில் முக்கிய இடம் இந்தப் பாட்டுக்கு உண்டு.
முதல் முறை பார்த்த ஞாபகம்... நீதானே என் பொன் வசந்தம்
முதல் முறை பார்த்த ஞாபகம்
உயிரினில் தந்து போகிறாய்
இதயத்தில் ஏனோ பாரம்
மழை வரும் மாலை நேரத்தில்
மனதினில் வந்து போகிறாய்
விழிகளில் ஏனோ ஈரம்
சில நேரம் மாயம் செய்தாய்
சில நேரம் காயம் செய்தாய்
மடி மீது தூங்க வைத்தாய்
மறு நாளில் ஏங்க வைத்தாய்
வெயிலா மழையா வலியா சுகமா எது நீ..?
எல்லா வரியும் நா. முத்துக்குமாருக்கும் பொருந்தும்.. நம்மை விட்டு விட்டுப் போன பொன் வசந்தம்... முத்துக்குமார்!