விடைபெற்றார் முத்துக்குமார்.. ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலியுடன் உடல் தகனம்
சென்னை: மறைந்த பாடலாசிரியர் நா. முத்துக்குமாரின் உடல் தகனம் இன்று மாலை நடைபெற்றது. அவரது இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
சென்னை நியூ ஆவடி சாலையில் உள்ள வேலங்காடு மின் மயானத்தில் உடல் தகனம் நடைபெற்றது.
மஞ்சள் காமாலை மற்றும் மாரடைப்பு காரணமாக பாடலாசிரியர் நா. முத்துக்குமார் இன்று காலை அகால மரணமடைந்தார். 41 வயதில் சாவைச் சந்தித்துள்ள முத்துக்குமாரின் மரணத்தால் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
முத்துக்குமாரின் உடல் தற்போது அவரது அண்ணா நகர் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு திரையுலகினர், அரசியல் கட்சியினர், பல்துறைப் பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
இயக்குநர்கள் சீமான், சேரன், வெற்றி மாறன், எஸ்.பி. ஜனநாதன், விக்கிரமன், ஆர்.கே.செல்வமணி, ராஜு முருகன், கவிஞர் சினேகன், நடிகர்கள் விஜய், விவேக், உதயநிதி ஸ்டாலின், நக்கீரன் ஆசிரியர் கோபால் உள்ளிட்டோரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
முத்துக்குமாரின் இறுதி ஊர்வலம் இன்று மாலை நடைபெற்றது. அவரது இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அவரது உடல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் நியூ ஆவடி சாலையில் உள்ள வேலங்காடு மின் மயானத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு தகனம் செய்யப்பட்டது. திரையுலகினர், பொதுமக்கள் பெரும் திரளாக இறுதி ஊர்வலத்திலும், இறுதிச் சடங்கிலும் கலந்து கொண்டனர்.
முன்னதாக அவரது உடலை சொந்த ஊரான காஞ்சிபுரம் அருகே உள்ள கன்னிகாபுரத்தில் தகனம் செய்ய வேண்டும் என்று அவரது பாட்டி கிருஷ்ணவேணி வேண்டுகோள் விடுத்திருந்தார். இருப்பினும் தற்போது உடல் தகனம் சென்னையிலேயே நடைபெறும் என அவரது குடும்பத்தினர் முடிவு செய்ததால் சென்னையிலேயே அவரது உடல் தகனம் நடைபெற்றது.