மோடிக்கு எதிராக தமிழகம் முழுவதும் நாளை நாம் தமிழர் கட்சி கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம்!
பிரதமர் மோடி தமிழகம் வருவதையொட்டி நாளை நாம் தமிழர் கட்சி சார்பில் மாநிலம் முழுவதும் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடக்கவுள்ளது.
Recommended Video
சென்னை : ராணுவக் கண்காட்சியை திறந்துவைக்க சென்னை வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை தமிழகம் முழுவதும் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த திருவிடந்தையில் நடக்கும் ராணுவக் கண்காட்சியைத் துவக்கி வைக்கப்பதற்காக நாளை காலை பிரதமர் மோடி சென்னை வருகிறார்.
காவிரி விவகாரத்தில் மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டிக்கும் விதமாக நாளை சென்னை வரும் மோடிக்கும் கறுப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்த தமிழக எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியும் மாநிலம் முழுவதும் நாளை கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளது. இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகம் சார்பில் செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதில், உச்சநீதிமன்றத் தீர்ப்பை அவமதித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமலும், தமிழகத்தில் ஹைட்ரோகார்பன், நியுட்ரினோ, ஸ்டெர்லைட், அணுவுலை, சாகர்மாலா உள்ளிட்ட பல்வேறு பேரழிவுத் திட்டங்களைச் செயல்படுத்தியும் தொடர்ச்சியாக தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது.
எனவே, இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், ஏப்ரல் 12ம் தேதி அன்று பிரதமர் மோடியின் தமிழ்நாடு வருகையையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கருப்பு கொடியேந்தி அறவழி ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்குமாறு நாம் தமிழர் கட்சியின் அனைத்து மாவட்ட, தொகுதி, நகர, ஒன்றியப் பொறுப்பாளர்களையும் உரிமையுடன் கேட்டுக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.