திருப்பரங்குன்றம் அரசுப் பள்ளிக்கு புத்துயிர்.. நாம் தமிழர் கட்சியினரின் சபாஷ் முயற்சி!
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நடுநிலைப்பள்ளியை தத்தெடுக்க நாம் தமிழர் கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.
மதுரை : திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை தத்தெடுத்து அந்தப் பள்ளிக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர நாம் தமிழர் கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியம் சோளங்குருணி என்ற ஊரில் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்று இயங்குகிறது. இங்கு சுமார் 250 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்தப்பள்ளியில் அடைப்படைவசதிகளான கழிவறைகள், குடிநீர் போன்றவைகள் ஏதுமற்ற நிலையில் இங்கு பயிலும் மாணவ மாணவிகள் அவதியுறுகிறார்கள். இந்தப் பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரும் முடிவோடு தென் மண்டல நாம்தமிழர் கட்சியினர் களத்தில் இறங்கியுள்ளனர்.
அடிப்படை வசதி இல்லாத பள்ளி
பள்ளியில் நாம் தமிழர் கட்சியினர் ஆய்வு செய்த போது மாணவர்களும் ஆசிரியர்களும் கழிப்பிட வசதியின்றியும், தண்ணீர் வர குழாய் வசதி கூட இல்லாமல் இருந்துள்ளன. கட்டிடங்கள் சிதிலமடைந்த சிலையில் மேற்கூரை இல்லாமலும், உடைந்துபோன தளம், மின்விளக்குகள் இல்லாமல் இருட்டடைந்த வகுப்பறை, பின்புறம் சுற்றுச்சுவர் இல்லாமல் திறந்தவெளியாக இருந்துள்ளன.
|
தத்தெடுக்க சீமான் ஆதரவு
காற்றாடி இல்லாத வகுப்பறைகள், வகுப்பறை முழுவதும் அழுக்கடைந்து வெள்ளையடிக்கப்படாத சுவர்கள் என நிறையக் குறைகளோடு இயங்கிக்கொண்டிருந்த பள்ளியில் முதற்கட்டமாக கழிப்பறை மற்றும் தண்ணீர்வசதியை உடனே இந்த மாணவர்களுக்கு செய்துதர முடிவெடுத்து ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் அனுமதி கேட்டு உற்சாகமாக பள்ளியை தத்தெடுத்துள்ளனர்.
தலைமை ஆசிரியர் மகிழ்ச்சி
பள்ளி தலைமையாசிரியர் இந்த விஷயத்தை தெரிவித்தபோது மகிழ்வோடு வரவேற்றதாகவும். இந்தப் பணிக்காக கல்வி அதிகாரிகளிடம் அனுமதி பெற்றுத் தருவதாகவும் உறுதியளித்துள்ளனர்.
சிறப்பாக அமைந்த கல்வி அதிகாரிகள் கூட்டம்
நாம் தமிழர் கட்சியினரின் முயற்சியை அடுத்து திங்கட்கிழமை காலையில் பள்ளியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தொடக்கக் கல்வி அலுவலர் , கூடுதல் தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் ஆசிரிய ஆசிரியைகள், பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள், நாம் தமிழர் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக்கூட்டம் பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது.
சபாஷ் முயற்சி
கூட்டத்தில் தீபாவளி விடுமுறை முடிந்தவுடன் முதல் வேலையாக ஆழ்குழாய் (போர்வெல்) அமைத்து வேலையைத் துவங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தென்மண்டல நாம் தமிழர் கட்சியினர் கூறியுள்ளனர். அரசுப் பள்ளியை தத்தெடுத்து வசதிகளை செய்து தரும் நாம் தமிழர் கட்சியினரின் முயற்சி நிச்சயம் பாராட்டிற்குரியதே.