ஐபிஎல் எதிர்ப்பு போராட்டம் : காலணி வீசி கைதான நாம் தமிழர் கட்சியினர் 9 பேர் ஜாமீனில் விடுதலை
ஐபிஎல் போட்டியின் போது மைதானத்தில் காலணி வீசியதால் கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியினர் 9 பேர் இன்று ஜாமினில் விடுதலையாகின்றனர்.
Recommended Video
சென்னை : சென்னையில் ஐபிஎல் போட்டி நடந்த போது, அதை எதிர்த்துப் போராட்டம் நடத்தியதற்காகக் கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியினர் இன்று மாலை ஜாமினில் புழல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட உள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. பல்வேறு விவசாய சங்கங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் மாணவர் அமைப்புகள் இந்த போராட்டத்தை முன்னெடுத்தன.
ஏப்ரல் 10ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியை ரத்து செய்யக்கோரியும் பல்வேறு அமைப்புகள் சேப்பாக்கம் மைதானத்திற்கு வெளியே போராட்டம் நடத்தினர். இதில் போராட்டக்காரர்கள் சிலரை போலீஸார் கைது செய்தனர்.
அதேநேரம், போட்டி நடக்கும் மைதானத்திற்குள் பார்வையாளராகச் சென்ற சிலர், விளையாட்டு மைதானத்தில் காலணிகளை வீசியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும் முழக்கங்கள் எழுப்பினர். இவர்களையும் காவல்துறை கைது செய்தனர்.
இதில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், பிரபாகரன் காமராஜ், பொன்னுவேல், மகேந்திரன், ராஜ்குமார், சுகுமார், ஆல்பர்ட், ஏகாம்பரம், மார்டின் உட்பட 8 பேருக்கு ஜாமின் கிடைத்துள்ளது.
மேலும் ஐபில் போராட்டத்தில் பங்கேற்றதற்காக கைது செய்யப்பட்ட ஸ்டாலினுக்கும் ஜாமின் கிடைத்துள்ளது. மீதம் இருப்பவர்களையும் ஜாமினில் எடுக்க நாம் தமிழர் வழக்கறிஞர் பாசறை நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது.
சென்னை புழல் மத்திய சிறையில் இருந்து இவர்கள் 9 பேரும் இன்று மாலை விடுதலை ஆக இருப்பதால், அவர்களை வரவேற்க நாம் தமிழர் கட்சியினர் புழல் சிறை வாசலில் குவிந்து வருகின்றனர்.