ஐபிஎல் போராட்டத்திற்காக குண்டர் சட்டத்தில் கைதானவர்.. 'நாம் தமிழர்' இடும்பாவனம் கார்த்திக் விடுதலை
ஐபிஎல் முற்றுகையில் குண்டர் சட்டத்தில் கைதான நாம் தமிழர் கட்சி இடும்பாவனம் கார்த்திக் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video
சென்னை: காவிரி உரிமைக்காக ஐபிஎல் முற்றுகையில் ஈடுபட்டதற்காக, குண்டர் சட்டத்தில் கைதான நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இடும்பாவனம் கார்த்திக் மற்றும் ஸ்டெர்லைட் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசு உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடும் வரை தமிழகத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தக் கூடாது என்று நாம் தமிழர் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி ஐபிஎல் போட்டி நடைபெற்ற சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தை முற்றுகையிட்டனர். அப்போது போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், "காவிரி நதிநீர் உரிமைக்காகத் தமிழகமெங்கும் போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் தமிழக தலைநகர் சென்னையில் நடைபெற்றுவந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மக்களைப் திசைதிருப்புவதாக அமைந்ததால், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடும் வரை தமிழகத்தில் ஐபிஎல் போட்டிகள் நடத்தாமல் வேறு மாநிலங்களுக்கு இடமாற்றம் செய்துகொள்ளுங்கள் என்று பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை வைக்கப்பட்டும் தொடர்ச்சியாக ஐபிஎல் போட்டிகள் நடைப்பெற்றதால் கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி நடைபெற்ற ஐபிஎல் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கொலை முயற்சி வழக்குத் தொடரப்பட்டது.
மேலும் கட்சியைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்துவிட்டனர். அதே வழக்கில் நாம் தமிழர் கட்சியின் மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் கடந்த மே-18 அன்று சென்னை, பெருங்குடியில் நடைபெற்ற மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிவிட்டு இரவு அலுவலகம் திரும்புகையில் காவலர்களால் கைது செய்யப்பட்டு பின்னர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார்.
கடந்த ஜூலை 4 அன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அறிவுரைக் கழகத்தில் நீதிபதிகள் அமர்வில் நேர் நிறுத்தப்பட்டு ஜூலை 14 அன்று குண்டர் சட்டம் இரத்து செய்யப்பட்டதாக தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், நேற்று ஜூலை 23 ஆம் தேதி பிணை கிடைத்ததையொட்டி இன்று செவ்வாய்க்கிழமை புழல் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். அப்போது நாம் தமிழர் கட்சியினர் இடும்பாவனம் கார்த்திக்கிற்கு வரவேற்பு அளித்தனர்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி நடைபெற்ற 100வது நாள் போராட்டத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இந்தப் போராட்டத்தில் பங்கேற்றதாக நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ந.வியனரசு போலிஸாரால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். இந்நிலையில், வியனரசு இன்று பாளையங்கோட்டை மத்திய சிறையிலிருந்து பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
"தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி நடைபெற்ற தொடர் போராட்டத்தின் 100வது நாள் அன்று நடைபெற்ற மாபெரும் மக்கள் திரள் பேரணியில் பங்கேற்றதைச் சான்றாக வைத்து, பேரணியில் ஏற்பட்ட வன்முறையில் தொடர்புள்ளதாகக் கூறி 7 பிரிவுகளின் கீழ் பொய் வழக்குகள் பதிந்து கடந்த மே மாதம் 30ஆம் தேதி கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஐயா நெல்லை அ.வியனரசு அவர்கள், இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் பாளையங்கோட்டை மத்தியச் சிறையிலிருந்து பிணையில் வெளிவந்துள்ளார். அப்பொழுது நாம் தமிழர் உறவுகள் கூடி சிறப்பான வரவேற்பு அளித்தனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.