திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் நாம் தமிழர் போட்டி - சீமான்
வரப்போகும் 2 இடைத்தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: பெரும்பாலான கட்சிகள் களம் இறங்க உள்ள நிலையில் நாம் தமிழர் கட்சியும் வரப்போகும் இடைத்தேர்தல்களில் போட்டியிடும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
இதுவரை எந்த இடைத்தேர்தல்களிலும் இல்லாத ஒரு பரபரப்பு வரப்போகும் திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்களுக்கு வந்துவிட்டது. காரணம், தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைகள் ஜெயலலிதா, கருணாநிதி இருவருமே இல்லை.
இதனால் தங்களை இந்த அரசியல் களத்தில் நிலைநிறுத்தி கொள்ள ஏராளமான போட்டா போட்டி நிலவுகிறது. நாங்கள்தான் 2 தொகுதிகளையும் கைப்பற்றுவோம் என்கிறார் ஒருவர், 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ஜெயிப்பேன் என்கிறார் இன்னொருவர், இரண்டு தொகுதியுமே என்றுமே எங்கள் கையில்தான் வந்து சேரப்போகிறது என்கிறார் மற்றொருவர்.
இதில் ஒரு சில கட்சியில், இவர்தான் வேட்பாளர் என்று சொல்லாமல் சொல்லப்பட்டும் வருகிறது. எப்படி பார்த்தாலும் அதிமுக, திமுக, அமமுக இந்த 3 கட்சியினரிடையேதான் கடுமையான போட்டி ஏற்படும் இப்போதே ஓரளவு தெரிந்துவிட்டது.
இந்நிலையில், சீமானும் இந்த இடைத்தேர்தல் எனும் கோதாவில் குதித்துள்ளார். ஆர்.கே நகர் இடைத்தேர்தலின்போதும் நாம் தமிழர் கட்சி மற்ற எந்த கட்சியினுடனும் கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிடும் என்றார் சீமான். அதேபோல, வரப்போகும் 2 இடைத்தேர்தல்களிலும் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் என்று சீமான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, ஒவ்வொரு கட்சியினரும் இடைத்தேர்தல்களில் போட்டியிடுவது குறித்து முக்கிய ஆலோசனை எடுக்க தொடங்கிவிட்டதால் அரசியல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.