திருச்செந்தூரில் நாளை நாம் தமிழரின் திருமுருகப் பெருவிழா- குமரியில் இருந்து வேல்-காவடி ஊர்வலம்!
திருச்செந்தூரில் நாம் தமிழர் கட்சியின் திருமுருகப் பெருவிழா நாளை நடைபெற உள்ளது.
சென்னை: திருச்செந்தூரில் நாம் தமிழர் கட்சியின் வீரத் தமிழர் முன்னணி சார்பாக திருமுருகப் பெருவிழா நடைபெறுகிறது. இப்பெருவிழாவையொட்டி கன்னியாகுமரியில் இருந்து வேல், காவடி ஊர்வலம் புறப்பட்டு திருச்செந்தூரை வந்தடைய உள்ளது. மேலும் கவிஞர் அறிவுமதி எழுதிய தமிழ் முருகன் வரலாறு' (History of Thamizh Murugan) நூல் வெளியிடப்படுகிறது.
தலைநிலக் குறிஞ்சி தந்த தலைவன், தமிழ் இறைவன் நமது முப்பாட்டன் என்பது நாம் தமிழர் கட்சியின் மெய்யியல் நிலைப்பாடு. இதனால் திருமுருகப் பெருவிழாவை அக்கட்சியின் மெய்யியல் பிரிவான வீரத் தமிழர் முன்னணி நடத்தி வருகிறது.
குமரியில் இருந்து வேல்-காவடி ஊர்வலம்
இந்த ஆண்டு முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் திருமுருகப் பெருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி நாளை காலையில் கன்னியாகுமரியில் இருந்து வேல்-காவடி ஊர்வலம் தொடங்கி திருச்செந்தூர் வந்தடைகிறது.
அறிவுமதி தொடங்கி வைக்கிறார்
இந்த ஊர்வலத்தை கவிஞர் அறிவுமதி கொடி அசைத்து துவக்கி வைக்கிறார். பேரணி திருச்செந்தூரை வந்தடைந்ததும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் முருகன் கோவிலுக்கு பேரணி புறப்படும்.
கலை நிகழ்ச்சிகளுடன் பொதுக்கூட்டம்
இப்பேரணியில் வேலாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்வுகள் இடம்பெறுகின்றன. முருகன் வழிபாட்டுக்குப் பின்னர் கோவில் திடலில் திருமுருகப் பெருவிழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் பறையிசை, கருப்புசாமி நாடகம்; மள்ளர் கம்பம், வேலாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்சிகள் நடைபெறும்.
அறிவுமதி நூலை வெளியிடும் சீமான்
பின்னர் கவிஞர் அறிவுமதி எழுதிய தமிழ் முருகன் வரலாறு' (History of Thamizh Murugan) நூல் வெளியிடப்படுகிறது. இந்நூலை சீமான் வெளியிட சொற்பொழிவாளர் நெல்லை கண்ணன் பெற்றுக்கொள்கிறார். பின் 'இறைநெறி' இமயவன், தென்னன் மெய்மன், நெல்லை கண்ணன், சீமான் ஆகியோர் உரையாற்ற உள்ளனர்.