தஞ்சை வருமான வரி அலுவலகத்துக்குள் நுழைந்த நாம் தமிழர் கட்சியினர் - கதவை பூட்டி போராட்டம்!
மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாம்தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்த நாம் தமிழர் கட்சியினர் வருமானவரி அலுவலகத்துக்குள் புகுந்து கதவை பூட்டிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும் தமிழகம் முழுவதும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் இன்று முழுஅடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றன.
பல இடங்களில் சாலை மறியல் மற்றும் ரயில் மறியல் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இதனால் தமிழகம் முழுவதும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில், தஞ்சாவூரில் வருமான வரி அலுவலகத்துக்குள் புகுந்து நாம் தமிழர் கட்சியினர் மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவித்தனர். திடீரென வருமான வரி அலுவலகத்துக்குள் புகுந்த நாம் தமிழர் கட்சியினர் அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த அலுவலர்களை வெளியேற்றிவிட்டு உட்புறம் கதவைப் பூட்டிக்கொண்டனர்.
காவல்துறையினர் அவர்களை வெளியேறுமாறு கேட்டுக்கொண்டும் போராட்டக்காரர்கள் வெளியே வர மறுத்துவிட்டனர். நெடுநேரம் பேச்சு நடத்தியபின் வெளியே வந்த போராட்டக்காரர்களை காவல் துறையினர் கைது செய்து வேனில் ஏற்றிச்சென்றனர்.