இலங்கையில் தாக்கப்படும் இஸ்லாமியர்கள்... சென்னையில் தூதரகத்தை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சி!
இலங்கையில் தமிழ் இஸ்லாமியர்கள் மீதான சிங்களர்களின் தாக்குதலைக் கண்டித்து இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிட்டு நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை : இலங்கையில் தமிழ் இஸ்லாமியர்கள் மீதான சிங்களர்களின் தாக்குதலைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் முன்பு போராட்டம் நடைபெற்றது.
இலங்கையில் கண்டியில் சிங்களர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது. கண்டி கலவரத்தால் 10 நாட்களுக்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டிருந்தது. இந்த கலவரத்தில் இஸ்லாமியர்கள் அதிகம் தாக்கப்பட்டனர். பள்ளிவாசல்கள் உட்பட முஸ்லிம்களின் சொத்துகளுக்கு பலத்த சேதம் ஏற்படுத்தப்பட்டது.
இந்நிலையில் இஸ்லாமியர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து சென்னையில் தமிழர் வாழ்வுரிமைக் கட்சி, ஆதித்தமிழர் விடுதலை இயக்கம், தமிழர் நலப் பேரியக்கம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த கட்சிகள் மற்றும் இயக்கங்கள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தன. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிட்டு இவர்கள் போராட்டம் நடத்தினர்.
#தற்போது
— நாம் தமிழர் கட்சி (@NaamTamilarOrg) March 17, 2018
அறிவிப்பு: இலங்கையில் தமிழ் இசுலாமியர்கள் மீதான சிங்கள இனவெறி தாக்குதலைக் கண்டித்து இலங்கைத் தூதரக முற்றுகைப் போராட்டம் – தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு | நாம் தமிழர் கட்சி #சீமான் #Seeman pic.twitter.com/do1Au5gAiE
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்த முற்றுகைப் போராட்டத்திற்கு தலைமை வகித்தார். போராட்டத்தின் போது இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல்களை இலங்கை அரசு நிறுத்த வலியுறுத்தி முழக்கங்களும் எழுப்பப்பட்டன.
போராட்டத்தின் போது சீமான் செய்தியாளர்களிடம் பேசிய போது கூறியதாவது : தமிழர்கள் என்பதாலேயே இலங்கையில் தாக்கப்பட்டு அழிக்கப்படுகின்றனர். பன்நாட்டு சமூகம் இதில் தலையிட்டு இலங்கையில் தமிழக இஸ்லாமியர்கள் மீது நடத்தப்படும் திட்டமிட்ட தாக்குதல்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காகவே தூதரக முற்றுகைப் போராட்டத்தை நடத்துகிறோம்.
தமிழர்கள், இந்துக்கள் கொல்லப்பட்டு ஏராளமான இந்துக் கோயில்கள் இடிக்கப்பட்டு புத்தவிஹார்கள் அமைக்கப்பட்ட போது இந்திய அரசு எதுவுமே பேசவில்லை. அப்போதே செத்து விழுந்ததில் 90 சதவீதம் பேர் இந்தக்களாக இருந்த போதே இந்திய அரசு வாய் திறக்கவில்லை, இப்போது இறப்பவர்கள் இஸ்லாமியர்கள் என்பதால் மிகவும் மகிழ்சியில் வாயே திறக்காமல் அமைதியாக இருக்கின்றனர்.
இனப்படுகொலையின் தொடர்ச்சியாக இலங்கையில் முஸ்லீம்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. இலங்கை பௌத்த மத தீவிரவாத நாடு என்பதை முஸ்லீம்கள் மீதான தாக்குதல் மூலம் மீண்டும் உறுதியாகிறது என்றும் சீமான் குற்றம்சாட்டினார்.