ஆர்.கே நகரில் வீடுவீடாக பிரச்சாரத்தில் ஈடுபடும் நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் கட்சி ஆர்.கே நகரில் வீடுவீடாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறது.
சென்னை: நாம் தமிழர் கட்சி ஆர்.கே நகர் தொகுதியில் வீடுவீடாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை அன்றே நாம் தமிழர் கட்சி பிரச்சாரத்தை தொடங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
டிசம்பர் 21ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஆர்.கே நகர் இடைதேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராக கா.கலைக்கோட்டுதயம் என்பவர் மெழுகுவர்த்திகள் சின்னத்தில் போட்டியிடுகிறார். இதனையொட்டி கடந்த வெள்ளிக்கிழமை நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பரப்புரைப் பணிகள் முழுவீச்சில் தொடங்கியது.
நான்காவது நாளாக நேற்று காலை 8 மணி முதல், வேட்பாளர் கலைக்கோட்டுதயம் மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தென்னரசன் உள்ளிட்ட நாம் தமிழர் உறுப்பினர்கள் 41வது வட்டம், 41வது வட்டம், எழில் நகர், சந்திர சேகர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
அதனைத்தொடர்ந்து மாலை 6 மணிக்கு அன்புத்தென்னரசன் தலைமையில் 40வது வட்டம், வ.உ.சி நகர், ஆட்டோ நிறுத்தம், சந்தை அருகில் தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் புலவர் மறத்தமிழ்வேந்தன், இடும்பாவனம் கார்த்திக், செந்தில்குமார், மாரிமுத்து உள்ளிட்டோர் உரையாற்றினர்.
இறுதியாக வேட்பாளர் கலைக்கோட்டுதயம் அவர்கள் ஆர்.கே நகரில் நாம் தமிழர் கட்சி செயல்படுத்தவிருக்கும் திட்டங்களை எடுத்துக்கூறி உரையாற்றினார்.
ஐந்தாம் நாளான இன்று காலை 08:30 மணி முதல் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பு நடத்தப்பட இருக்கிறது. மேலும் மாலை 6 மணிக்கு சுண்ணாம்பு கால்வாய் அருகில் தெருமுனைக்கூட்டம் நடத்தப்பட இருக்கிறது.