பிரபாகரன் பிறந்த நாள்- தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சியினர் குருதி கொடை முகாம்
பிரபாகரனின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சியினர் இன்று குருதி கொடை முகாம் நடத்தினர்.
சென்னை: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் 63-வது பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சியினர் இன்று ரத்த தானம் வழங்கினர்.
பிரபாகரனின் 63-வது பிறந்த நாள் இன்று உலகம் முழுவதும் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது. தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கட்சி அலுவலகங்களில் கேக் வெட்டி பிரபாகரன் பிறந்த நாளை கொண்டாடினர்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பிரபாகரன் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார்.
அத்துடன் ஆண்டுதோறும் தமது வீட்டில் பிரபாகரன் பிறந்த நாளில் நடத்தும் அசைவ விருந்து நிகழ்ச்சியையும் நடத்தினார் சீமான்.
தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சியினர் பிரபாகரன் பிறந்த நாளை முன்னிட்டு ரத்த தானம் வழங்கினர்.
இன்று மாலை சென்னையில் சீமான் பங்கேற்கும் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது.
ஈரோட்டில் நாம் தமிழர் கட்சியினர் சாலையோரங்களில் வசிக்கும் ஆதரவற்றோருக்கு போர்வையும், பிரட் பாக்கட்டும் வழங்கினர். மேலும் பறை இசை முழக்கத்துடன் நாம் தமிழர் கட்சி கொடி ஏற்றுதல் நிகழ்வும் நடைபெற்றது.