முப்பாட்டன் முருகன் வரிசையில் இணைந்த 'மாயோன்'.. நாம் தமிழரின் "கிருஷ்ண ஜெயந்தி" போஸ்டர்
சென்னை: தமிழரின் முப்பாட்டன் முருகன் என பிரகடனம் செய்திருந்தது நாம் தமிழர் கட்சியின் வீரத் தமிழர் முன்னணி. தற்போது முருகனுடன் மாயோனையும் (கிருஷ்ணனையும்) தமிழரின் முப்பாட்டனாக அறிவித்திருக்கிறது வீரத் தமிழர் முன்னணி.
நாம் தமிழர் கட்சியின் கலாசார மீட்பு இயக்கமாக வீரத் தமிழர் முன்னணி உருவாக்கப்பட்டது. அப்போது தமிழரின் முப்பாட்டன் முருகன்; அவர் குறிஞ்சி நிலத் தலைவர் என பிரகடனம் செய்தனர்.
நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் உள்ளிட்டோர் வேல், காவடி ஏந்தி பழனியில் முருகனுக்கு வழிபாடும் நடத்தினர். இதனிடையே இன்று கிருஷ்ணஜெயந்தி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
கிருஷ்ணர் பிறந்த இடமான மதுரா, ஆட்சி செய்த இடமான துவாரகை என பல இடங்களில் உற்சாகமாக கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. சங்க கால தமிழகத்தில் முல்லை நிலத் தலைவராக இருந்த மாயோன் தான் கிருஷ்ணராக மாற்றப்பட்டார் என்ற கருத்தின் அடிப்படையில் நாம் தமிழர் கட்சியினர் தற்போது "முல்லை நில இறைவன் எங்கள் முப்பாட்டன் மாயோன்" பெரும்புகழ் போற்றி போற்றி என சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.