மாற்றுத் திட்டங்களுடன் களத்தில் இறங்கும் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை- ஒரு பார்வை
சென்னை: இன்றைய அரசியல் தலைவர்கள் எண்ண ஓட்டத்தில் சிந்தித்துக் கூடப் பார்த்திராத பல புதிய மாற்றுத் திட்டங்களை முன்னிறுத்தி இத்தேர்தலில் களம் காண்கிறது நாம் தமிழர் கட்சி,
ஒவ்வொரு அத்தியாவசியத் தேவைக்கும் தன்னிறைவை நோக்கிய நகர்வை முன்வைப்பதன் மூலம் தனித்துவம் பெறும் இவர்களின் திட்டங்கள் உற்று நோக்கப்பட வேண்டியது. இவர்களின் ஆட்சி வரைவில் முன்வைக்கும் சில முக்கியத் திட்டங்கள்..
நீர் மேலாண்மை:
காவிரி நதி நீர் பங்கீடு, முல்லைப் பெரியார் நீர் மட்டம், போன்ற சிக்கல்களுக்கான தீர்வை நோக்கிப் பயணிப்பதுடன் நீர்த் தேவைக்கான விஷயங்களுக்கு மாற்றுத் திட்டங்கள் உடனடியாக முன்னெடுக்கப்படும். தனது தேவைக்கு அதிகமான மழை அளவைப் பெரும் தமிழகத்தில் சரியான நீர் மேலாண்மைக் கொள்கைகள் செயல்படுத்தப் படாததால் பல ஆயிரம் டிஎம்சி தண்ணீர் சேமிக்கப்படாமல் கடலில் கலக்கிறது. எனவே ஏரி, குளம், கண்மாய், என பல அடுக்குகளைக் கொண்ட நீர்த் தேக்கத் திட்டங்கள் செயல்படுத்தப் பட்டு நீர்ப் பிடிப்புப் பகுதிகள் அதிகரிக்கப்படும்.
நீர்வளம்
அதே போல் பூமிக்கடியில் உள்ள நீர்வளத்தையும், காற்றில் உள்ள ஈரப்பதையும் சிதைத்து நிலத்தடி நீரை அழிக்கும் யுகலிப்டஸ், சீமைக் கருவேலம் போன்ற மரங்கள் முழுதுமாக அழிக்கப்பட்டு புங்கை பனை என நீர்த் தேக்கத்திற்கு உறுதுணையான மரங்கள் வளர்க்கப்படும். பல வளர்ந்த நாடுகளில் உள்ளது போல நிலத்தடி நீரைக் குடிநீருக்கும், தேக்கிய நீரைப் பாசனத்திற்கும் பயன்படுத்த திட்டங்கள் அமைக்கப்படும்.
பொருளாதாரக் கொள்கை
அனைத்து வளங்களையும் தன்னகத்தே கொண்ட ஒரு மாநிலம் சந்தை மற்றும் சேவைத் துறைகளை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தை நம்பி இருப்பது காலப் போக்கில் நம்மை அடிமைப்படுத்தும். ஒரு தேசமும் மக்களும் எதற்கும் கையேந்தாதவர்களாக இருக்க வேண்டும். தனக்கான தேவைகள் வளர்ச்சிகள் அனைத்தும் தம் மண்ணிலிருந்தே பெற்றுக் கொள்ள வேண்டும். அதுதான் தற்சார்பு பொருளாதாரக் கொள்கை. இதைத்தான் நாம் தமிழர் அரசு முன் வைக்கிறது.
சரியாக பயன்படுத்த வேண்டும்
நீர்வளமும், நில வளமும் சார்ந்த தொழிற்சாலை மற்றும் வேலை வாய்ப்பு வளர்ச்சியைத்தான் நாம் தமிழர் அரசு முழுமையாக முன்னெடுக்கும். உற்பத்தி, ஏற்றுமதி, சந்தைப் படுத்துதல் என தேவையான கட்டமைப்புகள் ஏற்படுத்தப் படும். ஒரு சில வளத்தை மட்டுமே கொண்டுள்ள நாடுகள் பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைந்து சிறந்து விளங்குகின்றது. அனைத்தையும் பயிரிடக்கூடிய மண் வளம், கடல்வளம்,காட்டு வளம்,கனிம வளம், நீர் வளம் மற்றும் சாதகமான தட்பவெப்ப நிலை, மனித சக்தி அனைத்தையும் உடைய நாம் இவற்றை சரியாகப் பயன்படுத்தினாலே போதும் நாம் பொருளாதாரத்தில் மேம்பட்ட நிலையை அடையலாம்.
வேளாண்மை
நம் பாரம்பரிய கால்நடைகளை வளர்த்து, நம் பாரம்பரிய பயிரினங்களை இயற்கை முறையில் பயிரிட்டு, இது சார்ந்த தொழிற்சாலைகளை நிறுவி, கிராமத் தொழில்களை நிறுவனப்படுத்தி நம் பொருளாதாரத்தை பெருக்கலாம். இதன் மூலம் படித்தவர்கள் படிக்காதவர்கள் அனைவருக்கும் வேலை வாய்ப்பை உருவாக்கலாம். இப்பணிகளை அரசே கையிலெடுத்து சிறப்பாகச் செயல்படுத்தலாம். மதுபானக்கடைகளை நடத்தும் அரசு விவசாயத்தை எடுக்கக் கூடாதா? மரபணு மாற்றம் செய்யாத நம் பாரம்பரிய விதைகளைக் கொண்டு இயற்கை வேளாண்மையில் விளைந்த பொருள்களுக்கு அயல் நாடுகளில் நல்ல சந்தை மதிப்பு உள்ளதை நாம் அறிகிறோம். இவற்றை முறையாக உற்பத்தி செய்து, இது சார்ந்த தொழிற்சாலைகளை நிறுவி நம் தேவை போக மீதமுள்ளவற்றை சந்தைப்படுத்தினால் நம் பொருளாதாரத்தை எங்கோ கொண்டு போய் விடலாம்.
இதில் சில நடைமுறைச் சிக்கல்கள் இருந்தாலும், அவையெல்லாம் சரிசெய்ய க்கூடியவையே! சிறிது காலம் பிடிக்கும் அவ்வளவுதான். ஆனால் இதுதான் நமது உண்மையான வளர்ச்சி !
கல்வி
திறன் சார் கல்வி ஊக்கப் படுத்தப்பட்டு மாணவர்கள் கலை, விளையாட்டு, பண்பாடு என தங்களது திறன் சார்ந்த பாடத் திட்டத்தைத் தேர்ந்தெடுத்துப் படிக்கும் முறை உருவாக்கப்படும். ஒவ்வொரு துறைக்கும் அதற்கேற்ற வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். தமிழ் பயிற்று மொழி, ஆங்கிலம் கட்டாயப் பாட மொழி, ஏனைய அனைத்து மொழிகளும் விருப்பப் பாடமாக இருக்கும். ஒவ்வொரு 5 கிமீ சுற்றளவுக்கும் தரமான பசுமை சார் அரசுப் பள்ளிகள் நவீனத் தரத்துடன் நிறுவப் பட்டு பராமரிக்கப் படும்.
வெளிப்படையான நிர்வாகம்
ஊழலற்ற நாடுகளில் உள்ளது போல வெளிப்படையான நிர்வாகம் கட்டமைக்கப்படும். ஒவ்வொரு துறைக்கும் இணையதளம் உருவாக்கி அரசின் திட்டங்கள் அனைத்தும் அதில் வெளியிடப்படும். அரசின் ஒப்பந்தங்கள், ஒப்பந்ததாரர் விவரங்கள், மொத்தத் தொகை, முடிக்க வேண்டிய காலகட்டங்கள் என அனைத்தும் மக்கள் பார்வைக்கு வைக்கப்படும். அரசுக்கு எந்தெந்த வகையில் நிதி வருவாய் கிடைக்கின்றது அதைக்கொண்டு துறைகளுக்கு ஒதுக்கப்படும் நிதி எவ்வளவு என்ற விவரங்கள் வெளியிடப்படும்.
உதாரணங்கள்தான்
குறிப்பிட்டவை ஒரு சோற்றுப் பதம் தான், இன்னும் தீர்க்கமான பல திட்டங்களை தங்களின் ஆட்சி வரைவில் தெளிவாக முன்வைக்கிறார்கள்.
இவை சாத்தியமா என்ற கேள்விக்கு, இவர்களின் ஆணித் தரமான பதில், எது ஒன்றும் சாத்தியத்தில் இருந்து துவங்குவதில்லை தேவையில் இருந்துதான் துவங்குகிறது. நாங்கள் முன்வைக்கும் திட்டங்கள் அனைத்தும் எமது மக்களுக்கான உடனடித் தேவை. இவை தேவை என்று முடிவு செய்து அதனைச் சாத்தியப்படுத்த முனைவதுதான் ஒரு புரட்சியாளனின் கடமை. நாங்கள் இந்த மண்ணையும் மக்களையும் உயிராக நேசிக்கும் புரட்சியாளர்கள்.
புதிய சிந்தனைகள்
இந்த தேர்தல் களம் புதியதாக இருந்தாலும் புதிய சிந்தனைகள் மூலம் தேர்தல் களத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார்கள் நாம் தமிழர் கட்சியினர். முழுமையான நாம் தமிழர் ஆட்சி வரைவைப் படிக்க www.makkalarasu.com.