நாடா புயல்.. மின்சார விபத்தை தவிர்க்க இந்த எச்சரிக்கைகள் மிகவும் அவசியம்!
நாடா புயல் பாதிப்பினால் ஏற்படும் மின் பாதிப்புகளை தடுக்க மக்கள் விழிப்புடன் செயல்படுமாறு தமிழ்நாடு மின்வாரியம் எச்சரித்துள்ளது.
சென்னை: நாடா புயல் மற்றும் அதனையொட்டி பெய்யும் மழையால் அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள நடா புயல் கடலூருக்கு அருகில் டிச. 2-இல் கரையைக் கடக்கும் என்று கருதப்படுகிறது. இந்த புயலால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர் மற்றும் புதுச்சேரி, கரைக்கால், விழுப்புரம் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று வியாழன், வெள்ளி ஆகிய இரண்டு நாள்களும் விடுமுறை அறிவித்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்கமாறு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.
அதன்படி, வீட்டிற்கு வெளியே மற்றும் வயல்வெளிகளுக்கு செல்லும் போதும் மின் கம்பம் மற்றும் மின் ஓயர்கள் சேதமடைந்து கீழே உள்ளதா என கவனிக்க வேண்டும்.
மின்மாற்றிகள் மற்றும் பில்லர் பெட்டிகளில் மின் பொறி தென்பட்டால் அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு உடனடியாக தகவல் அளிக்க வேண்டும். மழை மற்றும் காற்றின் போது குழந்தைகளை மின் கம்பம் அருகில் செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
மேலும், மழைநீரில் குளிர்சாதனப் பெட்டி, தொலைக்காட்சி, துணி துவைக்கும் இயந்திரம் உள்ளிட்ட மின் உபகரணங்கள் நனைந்தால் அதனை பரிசோதித்த பிறகே மீண்டும் பயன்படுத்த வேண்டும்.
ஈரப்பதமான சுவர்களில் மின்கசிவு இருந்தால் பிரதான சுவிட்சை அணைக்க வேண்டும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.