மழை விட்டாலும் தூவானம் விடல… நாடா புயல் கடந்தாலும் கடல் சீற்றம் குறையல
நாடா புயல் இன்று அதிகாலையில் கரையைக் கடந்துவிட்டாலும் கடலின் சீற்றம் இன்னும் குறையவில்லை.
சென்னை: நாடா புயல் இன்று அதிகாலை காரைக்கால் அருகில் கரையைக் கடந்தது. என்றாலும் கடலின் சீற்றம் இன்னும் குறைந்தபாடில்லை. கடல் தற்போதும் கொந்தளிப்போடே காணப்படுகிறது.
வங்கக் கடலின் தென்கிழக்கில் உருவான நாடா புயல், இன்று அதிகாலையில் காரைக்கால் அருகில் கரையைக் கடந்தது. கடலில் புயல் உருவானதால், இரண்டு நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருந்தது.
இதனால் கடந்த 2 நாட்களாக தமிழகத்தில் காஞ்சிபுரம், மாமல்லப்புரம், கல்பாக்கம், நாகை, திருவெற்றொரியூர் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் உள்ள மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை.
3வது நாளாக மீன் பிடி இல்லை
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புதுப்பட்டினம், சட்ராஸ் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் 3வது நாளாக இன்றும் கடலுக்கு செல்லவில்லை. சின்னமுட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. படகுகள் அனைத்தும் கரைகளில் கட்டப்பட்ட நிலையிலேயே உள்ளன.
படகு போக்குவரத்து நிறுத்தம்
கடல் சீற்றம் அதிகமாக உள்ளதால் கன்னியாகுமரி கடலில் உள்ள திருவள்ளூவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு செல்லும் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
மீண்டும் புயல்
நாடா புயல் கரையை கடந்துள்ள நிலையில் மீண்டும் ஒரு புயல் ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவேதான், கடல் சீற்றம் தணியாமல் உள்ளது. இதனால் பல அடி உயரத்திற்கு மேல் அலைகள் மேலேழுந்து ஆர்ப்பரித்து வருகிறது.
எப்போது மீன் பிடிக்கச் செல்வது?
கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், மீனவர்கள் அனைவரும் தங்களது மீன்பிடி படகுகளை கரையிலேயே கட்டி வைத்துள்ளனர். மீண்டும் வானிலை ஆய்வு மையம் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லலாம் என்று எப்போது அறிவிக்கும் என்று மீனவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.