பெயருக்கு ஏற்றது போல் பெருந்தன்மையுடன் கரையை கடந்த 'நாடா': சென்னைவாசிகள் நிம்மதி பெருமூச்சு
சென்னை: நாடா புயல் கரையை கடந்துள்ளதால் சென்னை மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1ம் தேதி சென்னை வெள்ளத்தில் மிதந்தது. மக்கள் படகுகளில் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அந்த நாட்களை சென்னைவாசிகளால் இன்றும் மறக்க முடியவில்லை.
இந்நிலையில் சென்னை நோக்கி வந்த நாடா புயலால் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. புதன்கிழமை இரவில் இருந்தே மழை பெய்யத் துவங்கியது.
நேற்று சென்னையின் பல்வேறு இடங்களில் மழை பெய்தாலும் அதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. புயலால் மழை வெளுத்து வாங்கி மீண்டும் வெள்ளத்தில் மிதப்போமோ என்று சென்னை மக்கள் பயத்தில் இருந்தனர்.
மழையின் தீவிரம் அதிகரித்தால் சொந்த ஊர்களுக்கு கிளம்பிவிட வேண்டியது தான் என்று சென்னையில் உள்ள வெளியூர்காரர்கள் முடிவு செய்திருந்தனர். இந்நிலையில் தான் நாடா இன்று அதிகாலை காரைக்கால் அருகே கரையை கடந்துள்ளது.
நாடா என்றால் பெருந்தன்மை என்பது பொருள். பெயருக்கு ஏற்றது போன்று பேரழிவை ஏற்படுத்தாமல் பெருந்தன்மையுடன் கரையை கடந்துள்ளது.