காரைக்கால் அருகே கரையை கடந்தது 'நாடா': மழையுடன் சுழற்றி அடித்த காற்று
சென்னை: நாடா புயல் கடலூர் மற்றும் காரைக்கால் இடையே இன்று கரையை கடந்தது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலைய நேற்று முன்தினம் புயலாக மாறியது. இந்த புயல் சென்னையை நோக்கி நகர்ந்து வரத் துவங்கியது. இந்த புயலுக்கு நாடா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த புயலால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் புதன்கிழமை இரவில் இருந்தே மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் 8 மாவட்ட பள்ளிகளுக்கு நேற்றும், இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நாடா புயல் நேற்று வலுவிழந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடலூர் மற்றும் காரைக்கால் இடையே இன்று அதிகாலை கரையை கடந்தது.
நாடா கரையை கடந்தபோது சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் மணிக்கு 54 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது.
மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.