ஆரம்பமே அமர்க்களம்.. இந்தாண்டின் முதல் மழை லீவு... அதுவும் 2 நாட்கள்... மாணவர்கள் ஹேப்பி!
நாடா புயலால் தமிழக பள்ளிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை: நாடா புயலால் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதால், தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களுக்கு நாளையும், நாளை மறுநாளும் என இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தென் கிழக்கு வங்க கடலில் இலங்கைக்கு அருகே சில நாட்களுக்கு முன் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. அது ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்றது. தற்போது புயலாக மாறியுள்ளது. அதற்கு 'நாடா' புயல் என பெயரிடப்பட்டுள்ளது.
இந்தப் புயல் நாளை மறுநாள் கடலூர் அருகே கரையைக் கடக்க உள்ளது. இதனால் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, இம்மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பள்ளிகளுக்கு விடுமுறை..
அதன் ஒருகட்டமாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், நாகை மாவட்டங்களில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் வானூர் மற்றும் மரக்காணம் ஒன்றியங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
மொத்தம் 4 நாட்கள்...
மழை காரணமாக நடப்பாண்டில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவது இதுவே முதல்முறை ஆகும். இந்த விடுமுறையானது வியாழன், வெள்ளி என வார இறுதி நாட்களோடு சேர்ந்து வருவதால், சனி, ஞாயிறுடன் சேர்த்து மொத்தம் நான்கு நாட்கள் மாணவர்களுக்கு விடுமுறை கிடைத்துள்ளது.
கடந்தாண்டு நிலவரம்...
கடந்தாண்டு வெள்ளத்தின் போது, கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கும் அதிகமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அப்போது வானிலை ஆய்வு மைய இயக்குநராக இருந்த ரமணனை கடவுள் ரேஞ்சுக்கு மாணவர்கள் கொண்டாடினார்கள்.
மனக்குறை...
ஆனால், அவர் கடந்த மார்ச் மாதம் ஓய்வு பெற்றுவிட, அவரைத் தொடர்ந்து பதவியேற்ற பாலச்சந்திரன் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கவில்லையே என்ற மனக்குறை அவர்களிடம் இருந்தது.
மாணவர்கள் ஹேப்பி...
இந்த சூழ்நிலையில் தான், நாளையும், நாளை மறுநாளும் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது. அதுவும் இரண்டு நாட்கள். இதனால் மாணவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.