ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக களம் இறங்கிய தென்னிந்திய நடிகர் சங்கம்!
நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று தென்னிந்திய நடிகர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
சென்னை: புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று தென்னிந்திய நடிகர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. மேலும் களங்மிறங்கி போராடும் மக்களின் உணர்வுகளுக்கு அழுத்தம் தரும் வகையில் நாங்கள் அவர்களுக்கு என்றும் துணை நிற்போம் என்றும் தெரிவித்துள்ளது.
இது குறித்து தென்னிந்திய நடிகர் சங்கம் விடுத்துள்ள அறிக்கை :
தற்போது தமிழகம் மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கான நீர் இன்றி இயற்கையின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கிறது. எதிர்வருகிற காலங்களும் மழை வந்து நம்பிக்கையூட்டுவதாக இல்லாமல் பயப்படுத்துகிறது. இந்நிலையில் 'மீத்தேன்' என்கின்ற திட்டம் 'ஹைட்ரோ கார்பன்' திட்டமாக மறுவடிவமெடுத்து புதுக்கோட்டை, தஞ்சை பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் செயல்படுத்துவதற்காக மத்திய அரசு திட்டமிட்டு இருப்பது மக்களிடையே பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
நாட்டிற்கும், வளர்ச்சிக்கும் உகந்த திட்டமாக இருந்தாலும், விவசாய நிலங்களை அழித்தும் அதற்கான பாதிப்பை உண்டாக்கியும் ஏற்படுத்தும் திட்டம் எதுவுமே ஏற்புடையதல்ல. அத்தோடு, இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தும்போது, அப்பகுதி மக்களிடையே விளக்கி ஒப்புதல் பெற்ற பிறகே செயல்படுத்தவேண்டும்.
களங்மிறங்கி போராடும் மக்களின் உணர்வுகளுக்கு அழுத்தம் தரும் வகையில் நாங்கள் அவர்களுக்கு என்றும் துணை நிற்போம் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்.
#SIAA 's letter to central Govt , protest to #HydrocarbonProject . pic.twitter.com/aSDg6Nua7S
— NadigarSangam PrNews (@NadigarsangamP) March 1, 2017
மக்களும், தமிழக அரசும் வைத்துள்ள இந்த கோரிக்கையை ஏற்று இத்திட்டத்தை உடனே ரத்து செய்ய வேண்டும் என்று தென்னிந்திய நடிகர் சங்கம் மத்திய அரசை கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.