நடிகர் சங்கத்திலிருந்து சரத்குமார், ராதா ரவி மற்றும் வாகை சந்திரசேகர் சஸ்பென்ட்!
சென்னை: நடிகர் சங்கத்திலிருந்து முன்னாள் தலைவர் சரத்குமார், செயலாளர் ராதாரவி, பொருளாளர் வாகை சந்திரசேகர் ஆகியோர் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று நடிகர் சங்க செயற்குழுக் கூட்டம் தி நகரில் நடந்தது. கூட்டத்தின் முடிவில் காவிரிப் பிரச்சினையில் நடிகர் சங்கத்தின் நிலை குறித்து விரிவான அறிக்கை வழங்கப்பட்டது.
இந்த அறிக்கை வெளியான சில நிமிடங்களில் நடிகர் சங்கத்திலிருந்து முன்னாள் நிர்வாகிகள் சரத்குமார், ராதாரவி மற்றும் வாகை சந்திரசேகர் ஆகியோர் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. அதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டது.
நடிகர் சங்கத்தில் சரத்குமார் தலைமையிலான நிர்வாகத்தில் ஏராளமான முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், அதுகுறித்த கேள்விகளுக்கு இன்னும் பதில் தராததால் சரத்குமார் உள்ளிட்டோரை இடை நீக்கம் செய்யப் போவதாகவும் ஏற்கெனவே நடிகர் சங்க பொதுச் செயலர் விஷால் கூறியிருந்தார். இது தொடர்பாக சரத்குமார், ராதாரவி மற்றும் வாகை சந்திரசேகர் மீது சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் புகாரும் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.