மகாமகம் தீர்த்தவாரி: கும்பகோணத்தில் ஆசி வழங்கும் நாக சாதுக்கள்
தஞ்சாவூர்: மகாமகப் பெருவிழாவின் தீர்த்தவாரியில் பங்கேற்பதற்காக முதன்முறையாக இமயமலை, காசியிலிருந்து 15 நாக சாதுக்கள் கும்பகோணத்திற்கு வந்து குடில் அமைத்து தங்கி யாகம் செய்வதோடு பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகின்றனர்.
வடஇந்தியாவில் நடைபெறும் கும்பமேளாவின் போது, நாக சாதுக்கள், அகோரிகள், துறவிகள் திரளாக வந்து புனித நீராடி ஆசீர்வாதம் வழங்குவார்கள். இவர்கள் இமயமலை, காசி, வாரணாசி ஆகிய இடங்களில் தான் வசிப்பார்கள்.
வடஇந்தியாவில் நடைபெறும் கும்பமேளாவின் போது 48 நாட்களும் அவர்கள் தவம் இருப்பார்கள். தவமிருக்கும் இடத்தில் யாகம் நடத்தி அதில் கிடைக்கும் சாம்பலை தங்களது உடலில் இவர்கள் பூசிக்கொள்வது வழக்கம்.
துறவிகள் மாநாடு
கும்பகோணம் மாகமகத் திருவிழாவையொட்டி இந்தாண்டு முதன்முறையாக துறவிகள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்கும், மகாமகக் குளத்தில் புனித நீராடுவதற்கும் நாடெங்கிலும் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட துறவிகள், சாதுக்கள் வந்துள்ளனர்.
நாக சாதுக்கள்
இதில், முதன்முறையாக இமயமலை, காசியிலிருந்து 15 நாக சாதுக்கள் வந்துள்ளனர். இவர்கள் கோவிந்தபுரம் பாண்டுரங்க ஆசிரமத்தின் அருகே புனித நதியான காவிரியின் துணை ஆறான வீரசோழன் ஆற்றின் கரையோரத்தில் கூடாரம் அமைத்து தங்கியுள்ளனர். அவர்களே உணவு சமைத்து சாப்பிடுகின்றனர்.
யாகம் செய்யும் சாதுக்கள்
மேலும், கூடாரத்திலேயே தவமிருந்த அவர்கள் யாகம் நடத்தியதுடன், சாம்பலை உடலில் பூசிக்கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகின்றனர். தீர்த்தவாரி தினமான இன்று மகாமகக் குளத்தில் புனித நீராட உள்ளனர்.
பஞ்சமூர்த்திகள் பவனி
காலை 9 மணிக்கு விநாயகர், சுப்ரமணியர், கும்பேஸ்வரர், மங்களாம்பிகை, சண்டீகேசுவரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் வெள்ளி வாகனத்தில் புறப்பட்டு மகாமக குளத்தில் மதியம் 12 மணி முதல் 1 மணிக்குள் தீர்த்தவாரி கண்டருளுகின்றனர். இரவு 7 மணிக்கு மகாமக குளத்தில் இருந்து சுவாமி, அம்பாள் ஏக சிம்மாசனத்தில் புறப்பட்டு கோயிலுக்கு வந்து சேருகின்றனர். 23ம் தேதி சப்தாவரணம் நிகழ்ச்சியும், 24ம் தேதி விடையாற்றி நிகழ்ச்சியும், 25ம் தேதி சுத்தாபிஷேகமும், 108 கலச அபிஷேகமும் நடைபெற்ற பின்னர் சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகள் மூலஸ்தானம் சென்றடைகின்றனர்.