தண்ணீர் இல்லாததால் வாடிய பயிர்கள்... கவலையில் நாகை விவசாயிகள்!
நாகப்பட்டினத்தில் போதிய தண்ணீர் கிடைக்காததால் பயிர்கள் வாடி வருவதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
நாகப்பட்டினம் : போதிய தண்ணீர் கிடைக்காததால் வளர்ந்து வந்த பயிர்கள் வாடி வருவதால் விவசாயிகள் கண்ணீர் சிந்தி வருகின்றனர். நிலத்தடி நீரும் வெகுவாகக் குறைந்துள்ளதால் மானியம் மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் தலைமையில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், நாகை மாவட்டத்தில் நிலத்தடி நீர் வெகுவாக குறைந்துவிட்டது. இதனால் விவசாயிகளுக்கு போர்வெல் மானியம் வழங்க வேண்டும்.
நெல் உற்பத்தி செலவு அதிகரித்துவிட்டதால் நெல் விலையை குவிண்டாலுக்கு ரூ.2500ஆக உயர்த்த வேண்டும். தண்ணீர் இல்லாமல் கருகிய பயிர்களுக்கு ஏக்கருக்கு தலா ரூ.30,000 நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். 6 மாதமாக புதிய மின் இணைப்பு கொடுக்கவில்லை என்றும் மின் இணைப்பு கொடுத்திருந்தால் பயிரை காப்பாற்றி இருக்கலாம் என்றும் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
நாகை மாவட்டத்தில் 2016-17ம் ஆண்டுக்கான பயிர் இழப்பீடு காப்பீட்டுத்தொகை வழங்கவில்லை. பிப்ரவரி 2ம் தேதி வரை உளுந்துக்கு பயிர் காப்பீடு செய்யலாம் என்று கலெக்டர் பெயரில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 2 காப்பீடு நிறுவனங்கள் ஒப்பு கொள்ளவில்லை பின்னர் எப்படி அந்த அறிக்கை வெளியானது என்றும் விவசாயிகள் கேள்வி எழுப்பினர்.