புதுச்சேரி மாநில சரக்குகளை கள்ள சந்தையில் விற்ற நாகைப் பெண் கைது!
நாகப்பட்டினம் : வீட்டில் அனுமதி இல்லாமல் மது பாட்டில்கள் பதுக்கி வைத்த பெண்ணை போலீசார் கைது செய்த விவகாரம் அப்பகுதியில் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இருந்து மது பாட்டில்கள் கடத்தி வருவதை தடுக்கும் வகையில் நாகை போலீஸ் சூப்பிரண்டு சஞ்சஞ்தேஷ்முக் உத்தரவின் பேரில் மது விலக்கு தனிப்படை அமைக்கப்பட்டு நாகை மாவட்டம் முழுவதும் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இரவு தனிப்படை போலீசார் சீர்காழியில் ரோந்து பணியில் இடுபட்டனர்.
அப்போது திருக்கோலக்கா என்ற தெருவில் உள்ள ஒரு வீட்டில் சந்தேகத்தின் பேரில் சென்று சோதனையில் ஈடுபட்டனர். அங்கு 50 அட்டை பெட்டிகளில் புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் 3000 எண்ணிக்கையில் மறைத்து வைத்திருப்பதை கண்டுபிடித்தனர். இந்த மதுபாட்டில்களை அந்தப் பகுதியில் கள்ளத்தனமாக விற்பதற்காக வைத்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அந்த வீட்டில் இருந்த தோப்புத் தெருவை சேர்ந்த தமிழரசி என்ற பெண்ணை கைது செய்தனர். மேலும் போலீசாரை கண்டதும் அந்த வீட்டிலிருந்து தப்பியோடிய ரவி என்பவரை தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களின் மதிப்பு ரூ.2.5 லட்சம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.