நாகப்பட்டினத்தில் கருப்பு மழை... அச்சத்தில் மக்கள்
நாகப்பட்டினத்தில் வீடுகளில் பிடித்து வைக்கப்படும் மழை நீர் சிறிது நேரத்தில் கருப்பாக மாறுவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
Recommended Video
நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் மழை பெய்த பாத்திரங்களில் பிடித்து வைக்கப்பட்ட மழை நீர் கருப்பாக இருந்ததால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
நாகை மாவட்டம், சீர்காழி அருகே பழையார் மீனவர் கிராமங்களான மடவாமேடு சுனாமி நகர், புதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு மழை பெய்தது. இந்நிலையில் மீனவர் குடியிருப்பு பகுதியில் மீண்டும் மழை பெய்தது.
அப்போது மீனவர்கள் தங்கள் வீட்டின் மொட்டை மாடிகளில் வைக்கப்பட்டிருந்த பாத்திரங்களில் தேங்கியிருந்த மழைநீர் கருப்பு நிறமாக இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் கருப்பு நிறமான மழைநீரை கீழே ஊற்றிவிட்டு மீண்டும் பாத்திரங்களை வீட்டின் மாடி பகுதியில் வைத்தனர். 10 நிமிடத்துக்கு பின்னர் மீண்டும் சென்று பார்த்த போது அனைத்து பாத்திரங்களிலும் தேங்கியிருந்த மழைநீர் கருப்பாகவே இருந்தது.
இதை பார்த்து மீனவர்கள் மேலும் அதிர்ச்சியடைந்தனர். மழைநீர் கருப்பு நீராக மாறிய சம்பவம் மீனவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மழை கருப்பாக இருப்பதற்கான காரணம் தெரியாமல் அவர்கள் குழப்பத்தில் உள்ளனர். மேலும் இது அமில மழையாக இருக்குமோ என்ற அச்சமும் அவர்களை தொற்றிக் கொண்டுள்ளது.