அரசுப் பேருந்தை ஓட்டிச் சென்ற ஆட்டோக்காரர்... இளைஞர் படுகாயம், மக்கள் அச்சம்!
தற்காலிக பணியாளராக நியமிக்கப்பட்ட ஆட்டோ டிரைவர் ஓட்டிய பேருந்து மோதி வாலிபர் படுகாயம் அடைந்தார்.
Recommended Video
நாகர்கோவில் : தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடர்வதால் கனரக ஒட்டுனர் உரிமம் வைத்துள்ள தற்காலிக ஓட்டுனர்களை வைத்து தமிழக அரசு நிலைமையை சமாளித்து வருகிறது. இந்நிலையில் நாகர்கோவில் அருகே ஆட்டோ ஓட்டுனர் ஓட்டிய பேருந்து மோதி இளைஞர் ஒருவர் படுகாயமடைந்ததால் பதற்றம் ஏற்பட்டது.
போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தம் காரணமாக பெரும்பாலான அரசுப் பேருந்துகள் தமிழகம் முழுவதும் இயக்கப்பட வில்லை. இதனால் பொது மக்கள் மிகவும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். அவர்களது இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து தற்காலிக டிரைவர்கள் மூலம் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இவர்களில் பலர் கனரக வாகனங்களை இயக்க அதிக அனுபவம் இல்லாதவர்கள் என்பதால் விபத்துக்களும் ஏற்படுகிறது. நாகர்கோவிலில் இருந்து மாலை 6 மணிக்கு ஆரல்வாய்மொழி வழியாக ஊரல்வாய்மொழிக்கு அரசு பேருந்து ஒன்று இயக்கப்பட்டது. அந்த பேருந்து 6.20 மணியளவில் ஆரல்வாய்மொழியில் சென்று கொண்டிருந்தபோது, சாலை ஓரத்தில் நடந்து சென்ற அழகியநகரைச் சேர்ந்த பெருமாள் என்பவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில், அவருக்கு படுகாயம் ஏற்பட்டது.
இந்த விபத்தை பார்த்ததும், அங்கு பொதுமக்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும், ஆரல்வாய்மொழி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமையிலான போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது அரசு பஸ்சை ஓட்டியவர் தற்காலிக டிரைவர் என்பது தெரிய வந்தது. ஆட்டோ டிரைவரான இவரிடம் கனரக வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் இருந்ததால் தற்காலிக ஓட்டுனர் பணிக்கு நியமித்துள்ளது தெரிய வந்தது.