தொடர் மழை பெய்தும் பயன் இல்லை- நாகர்கோவில் விவசாயிகள் கண்ணீர்
தொடர் மழை பெய்தும் பயனில்லை என்று நாகர்கோவில் விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.
நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் சாரல் மழை பெய்து வரும் நிலையில் நீர் நிலைகளில் போதிய அளவு நீர் நிரம்பாததால் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளும் தற்போது நிரம்ப தொடங்கியுள்ளன.
இதற்கிடையே மாவட்டம் முழுவதும் பெய்து வரும் மழை காரணமாக பாதி குளங்கள் முற்றிலும் நிரம்பியுள்ளன. 208 குளங்கள் நிரம்பும் தருவாயில் உள்ளது. 461 குளங்கள் 50 முதல் 75 சதவீதம் அளவு நிரம்பியுள்ளது.
479 குளங்கள் 25 முதல் 50 சதவீதம் வரை நிரம்பியுள்ளது. 800 குளங்கள் 25 சதவீதம் மட்டுமே நிரம்பியுள்ளன என்று பொதுப்பணித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. மாவட்டம் முழுவதும் நேற்றும் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட ஒருசில இடங்களில் சாரல் மழை பெய்துகொண்டிருந்தது.
நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 23 அடியாக இருந்தது. பெருஞ்சாணி நீர்மட்டம் 47.25 அடியாக உள்ளது. சிற்றார் 1ல் 5.08 அடியும், சிற்றார் 2ல் 5.18 அடியும், பொய்கையில் மைனஸ் 3.20 அடியும், மாம்பழத்துறையாறு அணையில் 28.22 அடியும் நீர்மட்டம் காணப்படுகிறது.
மாவட்டத்தில் அதிகபட்சமாக சிற்றார் 1ல் 18.2 மி.மீ மழை பெய்திருந்தது. பேச்சிப்பாறையில் 8, பெருஞ்சாணியில் 3.6, சிற்றார் 2ல் 11.2, அடையாமடை 14, நாகர்கோவில் 11.4, பூதப்பாண்டி 8.6 மி.மீட்டரும் மழை பெய்திருந்தது.