கல்லூரி மாணவி பேரில் பேஸ்புக்கில் ஆபாச படம்... ரூ. 15 லட்சம் கேட்டு மிரட்டிய வாலிபரை தேடும் போலீசார்
இன்ஜினியரிங் கல்லூரி மாணவி பெயரில் பேஸ்புக்கில் ஆபாச படம் போட்டு, ரூ.15 லட்சம் கேட்டு மிரட்டல் விடுத்த வாலிபரை நாகர்கோவில் போலீசார் தேடி வருகின்றனர்
நாகர்கோவில்: இன்ஜினியரிங் கல்லூரி மாணவி பெயரில் பேஸ்புக்கில் ஆபாச படம் போட்டு மிரட்டல் விடுத்த வாலிபரை நாகர்கோவில் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
நாகர்கோவில் அருகே மணிக்கட்டி பொட்டல்வெளியை சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவரது பெயரில் உள்ள பேஸ்புக் முகவரியை திருத்தி போலி முகவரியில் புதிய பேஸ்புக் கணக்கை துவங்கி மாணவியின் புகைப்படங்களையும், அத்துடன் ஆபாச படங்கள் இணைத்து வெளியிடப்பட்டது.
இதை பார்த்த மாணவியின் தோழிகள் அவரிடம் தகவல் தெரிவித்தனர். அந்த போலி முகவரி பற்றி விசாரித்ததில் நாகர்கோவில் சரலூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் இவ்வாறு போலி முகவரியில் மாணவியின் புகைப்படைத்து பேஸ்புக்கில் வெளியிட்டது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து மாணவியின் சகோதரி மணிகண்டனின் செல்போனை தொடர்பு கொண்டு உடனடியாக அந்த கணக்கை அழிக்கும்படி வலியுறுத்தியுள்ளார். அதற்கு மறுத்த மணிகண்டன், 'அதை அழிக்க வேண்டுமானால் ரூ.15 லட்சம் தர வேண்டும் என்றும், இல்லையேன்றால் அந்த மாணவியின் புகைப்படைத்தை பல ஆபாச படங்களுடன் பல இணைதளங்களில் வெளியிடுவேன்' என்றும் மிரட்டியுள்ளார்.
இதுபற்றி மாணவியின் தாயார் சுசிந்திரம் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து தகவல் தொழில் நுட்ப பிரிவை தவறாக பயன்படுத்துதல், மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையே மணிகண்டன் தலைமறைவானார். தற்போது அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
என்ன காரணத்திற்காக மணிகண்டன் அவ்வாறு செய்தார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.