இடியும் நிலையில் ஆரம்ப சுகாதார நிலையம்.. நாகர்கோவில் மக்கள் புகார்
தரமற்ற பணிகள் காரணமாக நாகர்கோவிலில் புதிதாக கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் இடியும் நிலையில் இருப்பதால் நோயாளிகள் பீதியில் உள்ளனர்.
நாகர்கோவில்: தரமற்ற பணிகள் காரணமாக நாகர்கோவிலில் புதிதாக கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் இடியும் நிலையில் இருப்பதால் நோயாளிகள் பீதியில் உள்ளனர்.
நாகர்கோவில் அருகே பூவன்கோடு பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் பராமரிப்பு இல்லாமல் இருந்ததால் புதிதாக கட்டப்பட்டது. இந்த கட்டிடம் திறப்பு விழா கண்டு ஓராண்டை கடந்த நிலையில் இதுவரையிலும் செயல்படாமல் உள்ளது.
கட்டிடம் பயன்படுத்தாத நிலையில் ஒரு ஆண்டில் அதன் உட்புறம் உள்ள அறை சுவர்களில் தாறு மாறாக வெடிப்புகள் ஏற்பட்டு சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அரசு உடனடியாக இந்த கட்டிடத்தின் தரத்தை ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும் என்று பொதுமக்கள் கூறி வருகின்றனர்.
இந்த புகார் தொகுதி எம்எல்ஏவுக்கும் தெரிய வந்ததால் பூவன்கோடு பகுதியிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்ட மனோதங்கராஜ் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது, "மக்கள் நலனுக்காக கொண்டு வரப்படும் பல திட்டங்கள் அரசியல் சூழ்நிலைகளால் செயல்படுத்தபடாமல் கிடப்பில் போடப்பட்டு வருகிறது. இதனால் லட்சகணக்கான மக்கள் பணம் வீணாக விரயமாகிறது.'' என்றார்.
மேலும் ''இதேபோன்று பூவன்கோடு பகுதியில் நிறுவப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார துணை நிலையத்திற்கு ரூ.50 லட்சம் மக்களின் பணம் செலவழிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதி போக்குவரத்து வசதி உள்ளதும் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியாகும். இதனால் இந்த சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு இங்கு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டால் பெரிதும் பயன்படும்.'' என்றும் கூறினார்.
மேலும் ''இதனை உடனடியாக மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொண்டு நடவடிக்கையெடுக்க வேண்டும். இல்லையென்றால் எனது தலைமையில் போராட்டம் நடத்தப்படும்'' என்றும் எச்சரிக்கை விடுத்தார்.