நாகர்கோவிலில் சாதனை படைத்த டாஸ்மாக் விற்பனை.. பொங்கல் ரெக்கார்ட்!
குமரி மாவட்டத்தில் புத்தாண்டை மிஞ்சி பொங்கல் பண்டிகை அன்று மது விற்பனை நடந்து இருக்கிறது.
நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் புத்தாண்டை மிஞ்சி பொங்கல் பண்டிகை அன்று மது விற்பனை நடந்து இருக்கிறது. இதனால் டாஸ்மாக் நிர்வாகத்தினர் படு குஷியில் உள்ளனர்.
குமரி மாவட்டத்தில் 144 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்தன. அரசு உத்தரவு மற்றும் நீதிமன்ற உத்தரவு என இவற்றில் சில கடைகள் மூடப்பட்டு, தற்போது 105 கடைகள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன.
டாஸ்மாக் கடைகளில் தினமும் ₹2.25 கோடியில் இருந்து ₹2.50 கோடி வரை மது விற்பனை ஆகி வருகிறது. பொதுவாக பண்டிகை காலங்களில் டாஸ்மாக் விற்பனை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்.
பொங்கல் பண்டிகையின் முந்தைய நாளான போகி பண்டிகை கடந்த 13ம் தேதி கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் ₹3 கோடியே 2 லட்சத்து 27 ஆயிரத்து 340ம், 14ம் தேதி பொங்கல் பண்டிகை அன்று ₹4 கோடியே 10 லட்சத்து 6 ஆயிரத்து 565ம் மது விற்பனை நடந்துள்ளது.
கடந்த ஆண்டு 13ம் தேதி 4,525 பெட்டி மதுவும், 927 பெட்டி பீரும் விற்றுள்ளது. ஆனால் இந்த ஆண்டு 5,275 பெட்டி மதுவும், 1,193 பெட்டி பீரும் விற்றுள்ளது. கடந்த ஆண்டு 14ம் தேதி 6,495 பெட்டி மதுவும், 1,315 பெட்டி பீரும் விற்றுள்ளது.
இந்த ஆண்டு அதே தேதியில் 7,034 பெட்டி மதுவும், 1,959 பெட்டி பீரும் விற்றுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பொங்கலின் போது அதிக மது விற்பனையாகி உள்ளது. இந்த ஆண்டு போகி பண்டிகை மற்றும் பொங்கல் பண்டிகை என இரு நாட்களிலும் மொத்தம் ₹7 கோடியே 12 லட்சத்து 33 ஆயிரத்து 905க்கு மது விற்பனையாகியுள்ளது.
கடந்த புத்தாண்டு மற்றும் அதற்கு முந்தைய நாள் மொத்தம் ₹6 கோடியே 61 லட்சத்து 80 ஆயிரத்து 5க்கு மது வகைகள் விற்பனையாகி உள்ளது. இதனைவிட இந்த ஆண்டு பொங்கல் விற்பனை ₹50 லட்சத்து 53 ஆயிரத்து 900 ஆயிரம் அதிகம் ஆகும். இந்த விற்பனையால் டாஸ்மாக் மேலாளர்கள் நிம்மதியில் உள்ளனர்.