ரஜினி அரசியலுக்கு வந்தால் காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பேன்.. வலைவிரிக்கும் நக்மா !
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் காங்கிரஸ் கட்சிக்கு வருமாறு அழைப்பு விடுப்போம் என்று நக்மா கூறியுள்ளார்.
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது அவரது தனிப்பட்ட உரிமை என்றும் அரசியலுக்கு வந்தால் காங்கிரஸ் கட்சிக்கு அழைப்போம் என்றும் அகில இந்திய மகிளா காங்கிரஸ் செயலாளர் நக்மா தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது பற்றிய பேச்சுகள் தமிழக அரசியலில் கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது. ஒருவேளை அரசியலுக்கு வந்தால் அவர் தனிக்கட்சித் தொடங்குவாரா அல்லது தேசிய கட்சிகளில் இணைவாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
ஒரு புறத்தில் 8 ஆண்டுகளுக்கு பிறகு தலைவரை சந்தித்த மகிழ்ச்சியில் உள்ளனர் அவரது ரசிகர்கள். இருப்பினும் போர் வரும் போது தயாராக இருங்கள் என்று ரஜினி பேசியுள்ளது அரசியலுக்கு வருவதற்கான சமிக்கையாகவே கருதப்படுகிறது. ரஜினி பாஜகவுக்கு வந்தால் அவருக்கு ஏற்ற பொறுப்பு வழங்கப்படும் என்று டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில் ரஜினி அரசியலுக்கு வந்தால் காங்கிரஸ் கட்சிக்கு அழைப்போம் என்று அகில இந்திய மகிளா காங்கிரஸ் செயலாளர் நக்மா தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் டாஸ்மாக் போராட்டம் , நீட் தேர்வு பிரச்சனை, விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வரும் சூழலில் தற்போது உள்ள அதிமுக அரசு உட்கட்சி விவகாரங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் வழங்குவதாக குற்றம் சாட்டினார்.
மேலும் பாஜக அரசின் மூன்றாண்டு கொண்டாட்டத்திற்கு எந்த ஒரு காரணமும் இல்லை என்று தெரிவித்த அவர் பண மதிப்பீட்டு குறைப்பு பிரச்சனையில் பலர் தங்கள் வாழ்வை இழந்துள்ளனர் என்று தெரிவித்தார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது அவரது தனிப்பட்ட உரிமை என்றும் அரசியலுக்கு வந்தால் காங்கிரஸ் கட்சிக்கு அழைப்போம் என்றும் கூறினார். இதுதொடர்பாக நிச்சயமாக அவரை நேரில் சந்தித்து பேசுவேன் என்றும் கூறினார்.