ரஜினியைத் தொடர்ந்து கமலையும் சந்தித்து வணக்கம் வைத்த நக்மா!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த்தைத் தொடர்ந்து கமல்ஹாசனை நடிகை நக்மா சென்னையில் இன்று சந்தித்தார்.
நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவது குறித்த கருத்துகளை பதிவிட்டு வரும் நிலையில் நடிகையும், காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவருமான நக்மா இன்று அவரை சந்தித்துப் பேசியுள்ளார்.
தமிழகத்தில் ஊழல் மலிந்து விட்டதாக கூறியதையடுத்து அமைச்சர்கள் விமர்சித்ததில் தொடங்கியது கமலின் அரசியல் பயணம். தான் எப்போதோ அரசியலுக்கு வந்து விட்டதாக அதிரடி கிளப்பினார் நடிகர் கமல்ஹாசன்.
கமல் அரசியல்
நீட் தேர்வுக்குத் தடை, டெங்குவை ஒழிக்க நடவடிக்கை என தொடர்ந்து மக்கள் பிரச்னைகளுக்கு எதிராக கமல் டுவிட்டரில் கருத்துகளை பதிவிட்டு வருகிறார். தொடர்ந்து விடாமல் பிரச்சினைகளை அலசி வருகிறார்.
பாரபட்சமின்றி
மாணவி அனிதா தற்கொலை விவகாரத்திலும் பாரபட்சமின்றி மத்திய, மாநில அரசுகளை விமர்சித்திருந்தார். மேலும் தான் அரசியலுக்கு என்றோ வந்தவிட்டதாக மீண்டும் மீண்டும் கூறி வருகிறார் கமல்ஹாசன்.
நக்மா திடீர் சந்திப்பு
இந்நிலையில் நடிகையும், அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளருமான நக்மா ஆழ்வார் பேட்டையில் உள்ள வீட்டில் நடிகர் கமல்ஹாசனை சந்தித்து பேசினார். அநேகமாக அவரை காங்கிரஸ் கட்சியின் பக்கம் இழுப்பதற்காகவே இந்த சந்திப்பு நடந்திருக்கும் என்று சொல்லப்படுகிறது.
ரஜினியைத் தொடர்ந்து
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக எழுந்த பரபரப்பான சமயத்தின் போது நக்மா ரஜினிகாந்த்தை சந்தித்தார். ஆனால் சந்திப்பு குறித்து வெளிப்படையான தகவல் எதையும் சொல்லாவிட்டாலும், ரஜினியை காங்கிரஸ் பக்கம் இழுப்பதற்கான முயற்சி என்று கூறப்பட்டது.
இப்போது பிக் பாஸை சந்தித்துள்ளார்...இது எதற்கோ!