சென்னையில் திடீரென மு.க.ஸ்டாலினை நக்மா சந்தித்தது இதற்குதானாம்!
சென்னையில் ஸ்டாலினை திடீரென நக்மா சந்தித்ததும் இச்சந்திப்புக்கு திமுக முக்கியத்துவம் தந்தது ஏன் என்பது குறித்தும் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை: திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை திடீரென காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி பொதுச்செயலர் நடிகை நக்மா சந்தித்தது ஏன் என்பது குறித்து புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
காங்கிரஸ் கட்சியில் நடிகைகள் குஷ்பு மற்றும் நக்மா இடையேயான அக்கப்போர் உக்கிரமாகத்தான் இருக்கிறது. குஷ்பு தற்போது வெளிநாடு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
நடிகை நக்மாவோ ஒரு வார காலமாக சென்னையிலேயே முகாமிட்டு தனக்கான ஆதரவு கோஷ்டியை வலுப்படுத்தி வருகிறார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் மகளிர் காங்கிரஸ் கூட்டத்தை நக்மா கூட்டினார்.
திமுகவுடன் கூட்டணி
இக்கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது பேசிய மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும், திமுக கூட்டணியில்தான் நாம் நீடிக்க வேண்டும். கணிசமான இடங்களை பெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நக்மாவிடம் வலியுறுத்தினர்.
கனிமொழியுடன் சந்திப்பு
இதனைத் தொடர்ந்து திமுக மகளிர் அணி செயலாளரான கனிமொழி எம்.பி.யை நக்மா சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது உள்ளாட்சித் தேர்தல் இடம் ஒதுக்கீடு குறித்து நக்மா பேசியிருக்கிறார். ஆனால் கனிமொழியோ அண்ணன்(மு.க.ஸ்டாலின்)தான் இதில் முடிவெடுப்பார்... நான் ஒன்றும் செய்ய இயலாதே என கூறியிருக்கிறார்.
ஸ்டாலினுடன்..
இச்சந்திப்புக்குப் பின்னர் அண்ணா அறிவாலயம் சென்ற நக்மா ஸ்டாலினை சந்தித்து பேசினார். அப்போது உள்ளாட்சித் தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டிருக்கிறது. ஸ்டாலின் தரப்பிலும் நிச்சயம் ஆலோசிக்கிறோம் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.
நக்மாவுக்கு முக்கியதும்
ஸ்டாலின் தரப்பைப் பொறுத்தவரையில் நக்மாவுக்கு முக்கியத்துவம் தரவே விரும்புகிறது. குஷ்புவுக்கு எதிராக நக்மா இருப்பதால் அவருக்கு ஆதரவையும் முக்கியத்துவம் தருகிறதாம் அண்ணா அறிவாலயம்.