மகளிர் காங். மல்லுக்கட்டு... அரண்டு போன நக்மா.. சென்னை பக்கமே வராமல் தவிர்க்க முடிவு
மாநில மகளிர் காங்கிரஸ் அணியினர் தன்னைப்பற்றி தலைமைக்கு புகார் தட்டியிருப்பதால் தமிழகத்தைப் புறக்கணிக்க முடிவு செய்திருக்கிறாராம் நக்மா.
சென்னை: மகளிர் காங்கிரஸ் அணியில் நடக்கும் மல்லுக்கட்டு நக்மாவை அதிர்ச்சியடைய வைத்துள்ளதாம். தன்னைப்பற்றி மாநில மகளிர் காங்கிரஸ் அணியில் இருந்து டெல்லி தலைமைக்கு புகார் தட்டி விட்டுள்ளதால் தமிழகத்திற்கு வருவதையே தவிர்க்கலாமா என்று யோசித்து வருகிறாராம்.
அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொது செயலாளர் நக்மா, மற்ற மாநிலங்களில் விசிட் அடிப்பதை விட சமீபகாலமாக தமிழகத்தில் தான் ரவுண்ட் கட்டி வந்தார். காரணம், நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் களமிறங்குவதுதான் அவரின் எதிர்கால திட்டம்.
அதற்காகவே தமிழக அரசியலில் தம்மை அதிகம் ஈடுபடுத்திக்கொள்ள, அடிக்கடி விசிட் அடித்தபடி இருந்தார். மும்பையில் இருந்ததை விட சென்னையில்தான் அதிக நாட்களை செலவழித்தார். கூட்டணிக்கட்சியைச் சேர்ந்த தமிழக அரசியல் தலைவர்களை சந்தித்து பேசினார்.
மாநில மகளிர் அணி
இந்த சூழலில், தலித் சமூகத்தை சேர்ந்த தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவி ஜான்சிராணிக்கு காங்கிரஸில் உள்ள தலித் சமூகத்தை சேர்ந்த முன்னாள் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் பலரும் ஆதரவாக இருந்தனர்.
நக்மாவை நக்கலடித்த நிர்வாகிகள்
ஜான்சிராணியை மதிக்காத நக்மாவை, அவர்கள் அடிக்கடி நக்கலடித்தபடி இருப்பார்கள். இதனால், மகளிர் காங்கிரஸில் உள்ள முஸ்லீம் பெண் பிரமுகர்கள் நக்மாவை தூக்கிப்பிடித்தனர்.
சத்தியமூர்த்திபவன் சண்டை
இந்த விவகாரம் தான் அண்மையில் பவனில் அடிதடி வரை சென்றது. இந்த நிலையில், காங்கிரஸினுள் இருக்கும் தலித் பிரமுகர்கள், நக்மா சாதி ரீதியாக மகளிர் காங்கிரஸ் தலைவியை கேவலப்படுத்துகிறார். அவரை தமிழக அரசியலில் தலையிட தடை விதிக்க வேண்டும் என மேலிடத்துக்கு புகார் தட்டியுள்ளனர்.
நக்மாவின் முடிவு
மும்பையிலிருக்கும் நக்மா, இதனை அறிந்த அதிச்சியடைந்தவர், இனி தமிழகத்துக்கு வரணுமான்னு யோசிக்கிறேன் என மகளிர் நிர்வாகிகளிடம் ஆதங்கப்பட்டிருக்கிறார். அவர்களோ, புகார் சொல்றவங்களைப் பத்தி கவலைப்படாதீங்க மேடம் என தைரியப்படுத்தி வருகிறார்கள்.