மது பானத்தால் சீரழிக்கப்படும் சிறுமிகள்.. காரைக்காலை அதிர வைக்கும் போதை கும்பல்
காரைக்காலில் நடுரோட்டில் மதுபோதையில் சிறுமி விழுந்து கிடந்துள்ளார்.
காரைக்கால்: புதுச்சேரி என்றாலே குடிமகன்களுக்கு நினைவு வருவது மதுபானம்தான். இதேபோல, காரைக்கால், வாஞ்சூர் பகுதியிலும் நிறைய டாஸ்மாக் கடைகள் உண்டு.
ஏராளமான குடிமகன்கள், போதைக்கு அடிமையாகும் பெண்களையும், மற்றும் விவரம் அறியாத அப்பாவி பெண்களையும் அழைத்து வந்து, போதைகளை கொடுத்து, அவர்களை பாலியல் ரீதியாகவும் நாசமாக்கி கடைசியில் நிர்க்கதியாய் அம்போவென நடுத்தெருவில் விட்டுவிட்டு செல்கிறார்கள். இது நீண்டகாலமாகவே நடந்து வருகிறது. குறிப்பாக வாஞ்சூர் பகுதியில் இது அதிகமாக நடக்கிறது, தற்போதுகூட 14 வயதே ஆன சிறுமி போதையில் நடுரோட்டில் விழுந்து கிடந்த சம்பவம் நடந்துள்ளது.
14 வயது சிறுமியை வயதான ஒருவரும் நடுத்தர வயதுடைய 2 பேரும் டாஸ்மாக் கடைக்கு அழைத்து சென்று, மதுவினை வாங்கி கொண்டு ஒதுக்குப்புறமாக கூட்டி சென்றுள்ளனர். பின்னர், 1 மணி நேரம் கழித்து 3 பேருடன் ஒதுக்குப்புறத்திலிருந்து வெளியே வந்த அந்த சிறுமி போதை தலைக்கேறி தலைவிரி கோலத்தில் சாலையோரம் மயங்கி விழுந்தார்.
போலீசாரிடம் ஒப்படைப்பு
சிறுமி மயங்கி விழுந்ததும், அவளை கூட்டி வந்தவர்கள் நடுரோட்டிலேயே ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டனர். இதனை கவனித்த அவ்வழியாக சென்றவர்கள், 3 பேரையும் திருப்பட்டினம் போலீசாரிடம் பிடித்து ஒப்படைத்தனர். போலீசார்களோ, கூட்டிவந்த நபர்களுடனே சிறுமியை தமிழக எல்லைக்கு ஒரு ஆட்டோவை பிடித்து அனுப்பி வைத்துவிட்டனர்.
சாலையில் வீசி சென்றனர்
பின்னர் தமிழக எல்லை பகுதியான நாகூர் வந்ததும், அந்த சிறுமியை சாலையில் வீசிவிட்டு அவர்கள் ஓடிவிட்டனர். பிரதான சாலையில் போதையுடன் சிறுமி விழுந்து கிடப்பதை பொதுமக்கள் கனத்த இதயத்தோடு பார்த்து சென்றனர். பின்னர் நாகூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார், சிறுமியை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர்.
தர்காவுக்கு தாயுடன் சென்றவர்
இதையடுத்து சிறுமி ஓரளவு தெளிந்தபின் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சிறுமி திருச்சி துறையூரை சேர்ந்தவர் என்பதும், தாயுடன் நாகூர் தர்காவிற்கு சுற்றுலா வந்தபோது, மர்மநபர்கள் அவளை தர்காவிலிருந்து அழைத்து வந்து மது வாங்கி கொடுத்து இப்படி நாசம் செய்துவிட்டு போனதும் தெரியவந்தது. இதையடுத்து, மது வாங்கி கொடுத்த அந்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
போதையின் பிடியில் தமிழகம்?
போதையின் பிடியில் தமிழகம் அதிகமாக சிக்கி வருகிறதா? மும்பை, கல்கத்தா, பெங்களூருவில் மட்டுமே நடமாடிய கலாச்சாரம் தற்போது தமிழகத்தையும் பிடித்து ஆட்டுகிறதா? என தெரியவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன்பு பாலியல் தொல்லை செய்யப்பட்ட ரஷ்ய பெண், பாம்பு விஷம் சாப்பிட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகத்தை அவிழ்த்துவிட்டனர். அப்படியா என்று யூகித்து முடிப்பதற்குள், இன்னொரு பெண் போதையில் நடுரோட்டில் விழுந்து கிடந்திருக்கிறாள். போதை பொருட்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு இன்னும் அதிரடியும் தீவிரமும் காட்ட வேண்டியுள்ளது.