வைரமுத்துவை கொலை செய்யலாமா? நாவை அறுத்தால் ரூ10 லட்சம்... நயினார் நாகேந்திரன் வெறிப் பேச்சு
ஆண்டாள் குறித்து அவதூறாக பேசிய வைரமுத்துவை கொலை செய்யலாமா? என்று தமிழக பாஜக மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் பகீர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video
நெல்லை: ஆண்டாள் விவகாரத்தில் கவிஞர் வைரமுத்துவை கொலை செய்யலாமா? என்று நெல்லையில் ஜீயர்கள் கலந்து கொண்ட போராட்டத்தில் பாஜகவின் மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெறித்தனமாக பேசியிருப்பது கடும் சர்ச்சையாகி உள்ளது.
ஆண்டாள் விவகாரம் தொடர்பாக நெல்லையில் நடைபெற்ற கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் பேசியதாவது:
வைரமுத்துவின் நாக்கை அறுத்து வாருங்கள். நான் உங்களுக்கு ரூ.10 லட்சம் தருகிறேன். நாக்கின் மீது பல்லை போட்டுக் கொண்டு நமது இந்து தெய்வத்தை பற்றி யாராவது தவறாக பேசினால் அவரை கொலை செய்ய கூட நாம் தயாராக இருக்க வேண்டும்.
உயிரோடு திரும்ப முடியாது
வைரமுத்து, வீரமணி போன்றவர்களை நாம் நாட்டை விட்டே துரத்த வேண்டும். மடிசார் கட்டியவர்களுக்கு சிறு பிரச்சினை என்று சொன்னால் நயினார் நாகேந்திரன் போன்ற தொண்டர்கள் நிச்சயமாக உருவெடுத்து வருவார்கள். மதுரையில் இந்தி எதிர்ப்பு மாநாடு, யாராவது அப்படி ஒரு மாநாட்டை நடத்திவிட்டு உயிரோடு திரும்ப முடியாது என்றார் பசும்பொன் முத்துராமலிங்க தேவர். இப்படிப்பட்ட உணர்வோடு நாமும் செயல்பட வேண்டும்.
சாது மிரண்டால் காடு கொள்ளாது
ஜீயர்களே இன்று போராட்டம் நடத்துகின்றனர் என்றால் சாது மிரண்டால் காடு கொள்ளாது. இந்து மதத்தை பற்றி யாரும் இனி தவறாக பேசக் கூடாது என்பதற்காக கோயில்களில் யாகம் நடத்துங்கள். இந்து தர்மத்தை பழிக்கும் கருணாநிதி, வைரமுத்து, வீரமணி போன்றோர் இனி இவ்வாறு பேச கூடாது என்று கடவுளிடம் வேண்டுங்கள்.
வைரமுத்து மீது தமிழக அரசு
நல்லதொரு ஆட்சி மாற்றத்தை தமிழகத்தில் கொண்டு வர வேண்டும் என்பது எனது வேண்டுகோள். வைரமுத்துவின் நாக்கை அறுத்து வாருங்கள் என்று நான் கூறியதற்கு என் மீது போலீஸார் வழக்கு தொடுப்பர்.ஆனால் வைரமுத்து மீது தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழகத்தில் இனி ஒரு ஆட்சி வர வேண்டும் என்றால் அது நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி இருக்க வேண்டும்.
திமுக இனி ஆட்சிக்கு வரவே கூடாது
ஆண்டாள் குறித்து பேசிய வைரமுத்துவை கொலை செய்யலாமா. இந்து தர்மம் குறித்து இழிவாக பேசிய திமுக இனி ஆட்சிக்கு வரவே கூடாது. தேர்தல் வரும்போது இந்துக்கள் தங்களது அதிகாரத்தை காட்ட வேண்டும்.
இவ்வாறு நயினார் நாகேந்திரன் பேசினார்.