அதிமுகவை பலவீனப்படுத்துறோமா.. அப்படியிருந்தா எடப்பாடியை ஏன் முதல்வராக்கினோம்.. நயினார் நாகேந்திரன்
நெல்லை: நடுசென்டர் என்பதில் நடு என்பதும் ஒன்றுதான் சென்டர் என்பதும் ஒன்றுதான் என்று தமிழ்நாடு விவகாரம் குறித்து நயினார் நாகேந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.
நெல்லை மாநகரத்தில் தச்சநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் திருநெல்வேலி சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 30 லட்சம் ரூபாய் மதிப்பில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் இந்த விழாவில் பங்கேற்றார். இந்த நிகழ்வுக்கு பின்னர் செய்தியாளர்களை நயினார் நாகேந்திரன் சந்தித்தார். அப்போது அவரிடம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
களத்துல சந்திப்போம்.. விடாப்பிடி எடப்பாடி! மல்லுகட்டும் ஓபிஎஸ்.. மீண்டும் பருத்தி மூட்டை குடோன் கதை!
ஈரோடு பகுதி
அதற்கு அவர் கூறுகையில் ஈரோடு பகுதியில் அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் ஏற்கெனவே போட்டியிட்டது. தற்போது இடைத்தேர்தலில் யார் போட்டியிட வேண்டும் என்பதை கட்சி மேலிடம்தான் பேசி முடிவு செய்யும். 8ஆயிரம் வித்தியாசத்தில் ஏற்கெனவே வெற்றி வாய்ப்பை இழந்தோம். ஆனால் இந்த முறை நிச்சயம் எப்படியும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.
பாஜக கூட்டணியில் கருத்து வேறுபாடு
அதிமுக- பாஜக கூட்டணியில் கருத்து வேறுபாடு இருப்பது குறித்து கேட்கிறீர்கள். கூட்டணியில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தேர்தல் வரும்போது இணைந்துதான் செயல்படுவோம் என்றார். தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என சொல்வதுதான் சரியாக இருக்கும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்திருந்தார்.
ஆளுநர் தமிழ்நாடு
இதனால் ஆளுநர் தமிழ்நாடு என்ற பெயரை மாற்ற பார்க்கிறார் என சர்ச்சை எழுந்தது. பின்னர் ஆளுநர் தான் அப்படி சொல்லவில்லை என விளக்கம் அளித்தார். இதுகுறித்து நயினார் நாகேந்திரனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் நடு சென்டர் என்று சொன்னால் அதில் நடு என்பதும் சென்டர் என்பதும் ஒன்றுதான். அப்படித்தான் தமிழ்நாடு, தமிழகம் இரண்டும் ஒன்றும்தான் என்றார்.
நயினார் நாகேந்திரன் பதில்
அது போல் அதிமுகவில் இருக்கும் மோதல் போக்கு குறித்து நயினார் நாகேந்திரனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதிமுகவை பொருத்தவரைக்கும் யார் எப்படி பேசினாலும் அவர்கள் ஒன்றுபட்டால் தான் அதிமுகவுக்கு பலம். கருத்து வேறுபாட்டுடன் தேர்தலில் போட்டியிட்டால் நிச்சயம் பலவீனம்தான் ஏற்படும். அதிமுகவை பாஜக பலவீனப்படுத்தவில்லை. அப்படி பலவீனப்படுத்துவதாக இருந்தால் ஏன் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க வேண்டும்? என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார்.