அதிகாலையில் கைதான நக்கீரன் கோபால்.. 5 மணி நேர விசாரணைக்குப் பின் கோர்ட்டில் ஆஜர்
சென்னையில் மூத்த பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video
சென்னை: சென்னை விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்ட நக்கீரன் ஆசிரியர் ஆர். கோபால் தற்போது சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
முன்னதாக சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் 5 மணி நேரம் விசாரிக்கப்பட்டார். அதன் பின்னர் அவரை மருத்துவமனைக்கு போலீஸார் கொண்டு சென்றனர்.
நக்கீரன் ஆசிரியர் ஆர். கோபால் இன்று காலை திடீரென கைது செய்யப்பட்டார். புனே செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்தபோது அவரை கிண்டி போலீஸார் கைது செய்தனர்.
ஆளுநர் மாளிகை
ஆளுநர் மாளிகை கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவிகளை பாலியல் முறைகேடுகளில் ஈடுபட அழைத்து நிர்ப்பந்தப்படுத்திய வழக்கில் கைதானவர் அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி. இவர் குறித்து நக்கீரன் ஒரு செய்தி வெளியிட்டது. அதில், ஆளுநரை நிர்மலா தேவி 4 முறை சந்தித்ததாக நிர்மலா தேவி கூறியதாக இடம் பெற்றிருந்தது.
கைது செய்யப்பட்டார்
இதையடுத்து நக்கீரன் மீது ஆளுநர் மாளிகை புகார் கொடுத்தது. அந்த புகாரின் பேரில்தான் போலீஸார் கோபாலைக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட கோபால் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டார். அங்கு வைத்து விசாரணை நடந்து வந்தது.
விசாரணை நடந்தது
கிட்டத்தட்ட 5 மணி நேரம் போலீஸார் விசாரணை நடத்தினர்.நக்கீரன் கோபால் மீது 124வது பிரிவின் கீழ் ஜாம்பஜார் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 124வது பிரிவு என்பது ஆளுநர் மற்றும் குடியரசு தலைவரை பணி செய்யவிடாமல் தடுக்கும் வகையில் செயல்படுபவர்களுக்கு எதிராக போடப்படும் வழக்கு ஆகும். தேச துரோக வழக்கு தனியாக பதியப்பட்டுள்ளது.
நீதிபதி முன்பு ஆஜர்
விசாரணைக்குப் பின்னர் பலத்த பாதுகாப்புடன் நக்கீரன் கோபாலை, திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனைக்கு (கோசா மருத்துவமனை) போலீஸார் அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. அதன் பின்னர் அவரை சென்னை எழும்பூர் கோர்ட்டுக்கு போலீஸார் அழைத்து வந்தனர். தற்போது கோர்ட்டில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டுள்ளார் நக்கீரன் கோபால்.