வீரப்பன், பழங்குடியினர் நலன், ராஜ்குமார்.. அடுத்தடுத்து அதிரடி காட்டிய நக்கீரன் கோபால்.. பிளாஷ்பேக்
வீரப்பன் விவகாரத்தில் நக்கீரன் கோபால் பெருமளவு அரசுக்கு உதவினார்.
சென்னை: 1993-ம் ஆண்டு ஒரு காட்டு அரக்கனை நாட்டு மக்களுக்கு முதன்முதலாக செய்திகளில் பகிரங்கப்படுத்தியது நக்கீரன் கோபால்தான்.
ஒட்டுமொத்த தமிழகமே தன் போக்கில் போய்க் கொண்டிருக்க கோபால், மட்டும் வீரப்பன் விவகாரத்தை கையில் எடுத்தார். அதற்கு காரணம், தன் பத்திரிகையின் வளர்ச்சியோ, வழங்கப்படும் பரிசுதொகையோ ஒருபுறம் இருந்தாலும், அடிப்படை சமூக கண்ணோட்டமும், பத்திரிகை தர்மமும் இருந்ததை ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்.
[தமிழகத்தில் நெருக்கடி நிலை நிலவுகிறது.. நக்கீரன் கோபால் கைதுக்கு ஸ்டாலின் கண்டனம்]
வெளிச்சத்துக்கு வந்தது
ஒரு காட்டானிடம் சிக்கிக் கொண்டிருந்த கிட்டத்தட்ட ஆறு லட்சம் பழங்குடி மக்களின் விடியலே கோபால் வீரப்பன் விவகாரத்தை கையிலெடுக்க காரணமாக இருந்தது பெரும்பாலோருக்கு தெரியாத உண்மை. இதற்கான செய்திகளை சேகரிக்க சென்றால், அங்கே கிராம மக்களின் அல்லல்கள் தெரிய ஆரம்பித்தது. அந்த அல்லலை தந்து கொண்டிருந்தது போலீசார் என்பது மற்றொரு அதிர்ச்சி. இதைத்தான் கோபால் நக்கீரனில் வெளிச்சம் போட்டு காட்டினார்.
பழங்குடி மக்களுக்கு விடியல்
அதற்கான படங்களுடன் ஆதாரத்தை வெளியிட்டது நக்கீரன் இதழ். இந்த படங்களை கண்டு தமிழக மக்கள் உறைந்துபோனார்கள். அனைத்து அவல படங்களும் உச்சநீதிமன்றம், மனித உரிமை ஆணையம் போன்றவற்றின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. இதன் மூலம் உருவானதே சதாசிவம் கமிஷன். இந்த கமிஷன் மூலம் அந்த பழங்குடி மக்களுக்கு விடியல் வெள்ளம் பாய்ந்தது. இதற்கெல்லாம் முழு காரணம் கோபால் மட்டுமே!!
பொறாமைப்பட்டனர்
இதற்கு அடுத்ததாக வீரப்பன் விவகாரம். வீரப்பனை சரணடைய செய்யும் வேலைகளில் இறங்கினார் கோபால். எங்கோ ஒளிந்திருக்கும் ஒரு காட்டு ராஜாவை தேடி கோபால் போய்விட்டாரே என்று பத்திரிகை வட்டாரத்திலேயே பொறாமை பேச்சும் வந்து போனது.
ஆடியோ-வீடியோ
தமிழகம், கர்நாடகா, கேரளா வனப்பகுதிகளில் முடிசூடா ராஜாவாக வலம் வந்த வீரப்பனை நேரில் சந்தித்தார்.. நெருங்கி பேசினார்.. வீரப்பனைச் சந்தித்து நிறைய பேட்டிகளை எடுத்தார்... பேச்சுக்கள் அடங்கிய ஆடியோவை தமிழக அரசிடம் ஒப்படைத்தார்... கோபால் வீரப்பனுடன் எடுத்த போட்டோக்கள், வீடியோக்கள், ஆடியோக்கள் தமிழம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பைக் கிளப்பி விட்டன. இதனை தொடர்ந்துதான் கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் சம்பவம் நடைபெற்றது.
செய்தி சேகரிப்பு
அதேபோல ராஜ்குமார் கடத்தப்பட்டபோதும், திமுக ஆட்சி காலத்தில் அரசு தூதுவராக அனுப்பப்பட்டதும் கோபாலைதான். இதனால்தானோ என்னவோ இன்னமும்கூட கோபால் மீது திமுக அரரசியல் சாயல் பூசப்பட்டுள்ளது. இப்படி பழங்குடி மக்கள், வீரப்பன், ராஜ்குமார் என்று அடுத்தடுத்து விவகாரங்களில் கோபால் இறங்கி செயல்பட்ட விவகாரம் ஜெயலலிதா தரப்பில் புகைச்சலைதான் தந்தது. ஆனாலும் கோபால், பல நேரங்களில் வீரப்பனை நேரடியாக சந்தித்து, அவரது நிலை, வாழ்வியல் முறை, கடத்தல் பின்னணி என்று அனைத்தையும் சேகரித்து செய்திகளை நாட்டு மக்களுக்கு எழுதினார்.
ராஜ்குமார் விடுவிப்பு
முதலில் நக்கீரன் ஆசிரியர் கோபால், அதற்கு பிறகு பழ.நெடுமாறன் தலைமையிலான குழு, கொளத்தூர் மணியின் முயற்சிகள் என்று ஒவ்வொருவராக களம் இறங்க... தன்னுடைய கோரிக்கைகளும் ஒருவழியாக நிறைவேறியதையடுத்து... ராஜ்குமாரை அனுப்பி வைத்தார் வீரப்பன். அனுப்பும்போது, வேட்டி சட்டை பரிசாக கொடுத்து கட்டிப்பிடித்து வழியனுப்பி வைத்தார். அன்றைய காலம் தொட்டு, வீரப்பனை பற்றி பேசினால் நக்கீரன் கோபாலை பற்றி பேசாமல் இருக்கவே முடியாது.