யுனெஸ்கோ பட்டியலில் இணைந்தது பழமையான நாளந்தா பல்கலைக் கழகம் !
பாட்னா: யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய பட்டியலில் பீகார் மாநிலத்தில் உள்ள பழமையான நாளந்தா பல்கலைக்கழகம் சேர்க்கப்பட்டுள்ளது.
துருக்கியின் இஸ்தான்புல் நகரில் அண்மையில் நடைபெற்ற 40-வது உலகப் பாரம்பரிய குழுக் கூட்டத்தில், புதிதாக சேர்க்கப்பட்ட இடங்களை யுனெஸ்கோ அறிவித்தது. அதில் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நாளந்தா பல்கலைக்கழகம் அந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து யுனெஸ்கோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,நாளாந்தா பல்கலைக்கழகம் கி.மு. 3-ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 13-ஆம் நூற்றாண்டு வரை துறவிகளுக்குரிய மடாலயமாகவும், மாணவர்களுக்கு கல்வி அறிவை புகட்டும் பல்கலைக்கழகமாகவும் இருந்தது. இங்கு, கோயில்கள், ஸ்தூபிகள், கட்டடங்கள் (தங்குமிடம், கல்விக்கூடம்), அழகுக் கலைச் சிற்பங்கள் ஆகியவை உள்ளன என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளந்தா பல்கலைக்கழகத்துக்காக மாபெரும் கட்டடம் 6-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. குப்தர்கள் ஆட்சிக் காலத்தில் இப்பல்கலைக்கழகம் சிறப்பு வாய்ந்ததாக இருந்தது. அதன் பிறகு, பல்வேறு நாட்டினர் படையெடுப்புகளால் அவ்வப்போது சீர்குலைந்தது. 12-ஆம் நூற்றாண்டில் துருக்கிய ராணுவப் படையால் அழிக்கப்பட்டது.
உலகம் முழுவதும் தீவிர ஆய்வுக்குப்பின் 9 இடங்களை தேர்வு செய்து உலகப் பாரம்பரியப் பட்டியலில் இணைத்துள்ளதாக யுனெஸ்கோ அமைப்பு தெரிவித்துள்ளது.
யுனெஸ்கோ பட்டியலில் புதிதாக இணைக்கப்பட்ட இடங்கள் பின்வருமாறு:
ஜியோஜியங் ராக் கலை கலாசார நிலப்பரப்பு - சீனா
பழைமையான நாளந்தா பல்கலைக் கழகம் - இந்தியா
பாரசீக குவானட் - ஈரான்
கிழக்கு மைக்ரோனேசியா சடங்கு மையம் - மைக்ரோனேசியா
ஸ்டெச்சி-இடைக்கால கல்லறை கிரேவ்யார்ட்ஸ் (போஸ்னியா மற்றும் ஹெர்சிகோவினா),
குரோஷியா, மாண்டிநீக்ரோ, செர்பியா, கிரிஸ் பிலிப்பி தொல்பொருள் தளம் (கிரீஸ்),
ஆன்ட்டிகுயுரா டால்மென்ஸ் தளம் (ஸ்பெயின்);
அனி தொல்பொருள் தளம் (துருக்கி);
கோர்ஹமின் குகை (இங்கிலாந்து).