பிறப்பு முதல் பிரியங்கா வரை... 600 பக்கத்தில் நளினி போடப் போகும் "குண்டு"... !
பிறந்து வளர்ந்தது முதல் பிரியங்கா காந்தியைச் சந்தித்தது வரையிலான தனது வாழ்க்கைச் சம்பவங்களை தனது சுயசரிதையில் கூறியுள்ளாராம் நளினி.
வேலூர்: நளினியின் சுயசரிதை அதற்குள் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி விட்டது. தனது சுயசரிதையில் நளினி என்ன சொல்லியுள்ளார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
நளினியின் சுயசரிதை நிச்சயம் சலசலப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. காரணம், அவரது கடந்த 25 ஆண்டு கால சிறை வாழ்க்கை.
இத்தனை காலமாக சிறைக்குள்ளேயே அடைபட்டு தனது விடியலுக்குத் தொடர்ந்து சட்ட ரீதியாக போராடி வரும் நளினி நிச்சயம் தனது மனக் குமுறல்களை இந்த நூலில் கொட்டியிருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னல்கள்
இந்த நூலில் ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசாரணையின்போது தான் சந்தித்த பல்வேறு இன்னல்கள், கர்ப்பிணியாக சிறையில் பட்ட அவஸ்தைகளை அவர் விவரித்துள்ளதாக கூறப்படுகிறது.
பிரியங்காவின் சந்திப்பு
மேலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பிரியங்கா காந்தி சந்திப்பு குறித்துத்தான் மிக முக்கிய எதிர்பார்ப்பு உள்ளது. நூலின் பெயரிலும் கூட பிரியங்கா காந்தி பெயர் வருவதால் மேலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
நளினியை மிரட்டினாரா பிரியங்கா
பிரியங்காவுடனான சந்திப்பு குறித்து அவர் விவரித்திருக்கலாம் என்று தெரிகிறது. வேலூர் சிறைக்கு வந்து நளினியைச் சந்தித்தபோது பிரியங்கா, நளினியை மிரட்டிச் சென்றதாக ஒரு பரபரப்பு ஏற்பட்டது நினைவிருக்கலாம்.
வழக்கறிஞர் பேட்டி
நளினியின் சுயசரிதை குறித்து அவருடை வழக்கறிஞர் புகழேந்தி கூறுகையில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 25 ஆண்டுகளாக வேலூர் சிறையில் இருக்கும் நளினி ராஜீவ்காந்தி கொலை பின்னணியும், பிரியங்கா காந்தி சந்திப்பும் என்ற தலைப்பில் சுயசரிதை புத்தகம் எழுதி உள்ளார்.
600 பக்கம்
600 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகம் வருகிற 24ம் தேதி சென்னை வடபழனியில் வெளியிடப்படுகிறது. இதில் நளினி கலந்து கொள்ள மாட்டார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நாம்தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மற்றும் சினிமா இயக்குனர்கள், எழுத்தாளர்கள் உள்பட பலர் கலந்துகொள்கிறார்கள்.
பிறப்பு முதல் பிரியங்கா வரை...
பிறந்து வளர்ந்தது, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதானது, போலீசாரால் விசாரிக்கப்பட்ட விதம், அவர் அனுபவித்த இன்னல்களை நளினி இந்த சுயசரிதை புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த புத்தகம் வெளியானால் பெரிய மாற்றம் ஏற்படும் என்றார் புகழேந்தி.