எங்கள் கைகள் யாருடைய ரத்தத்தாலும் நனைக்கப்பட்டதல்ல .. நளினியின் நம்பிக்கை வீண் போகவில்லை
Recommended Video
சென்னை: 27 ஆண்டு காலமாக சிறைக் கொட்டடியில் வாசம் புரிந்து கொண்டிருக்கும் நளினியின் நம்பிக்கை வீண் போகவில்லை. சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் வாய்ப்பை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில் நளினி, முருகன், பேரறிவாளன் உட்பட 7 பேர் ஆயுள் தண்டனைக் கைதிகளாக உள்ளனர். தூக்கிலிருந்து தப்பியவர் நளினி.
இந்த நிலையில் 2016ம் ஆண்டு நளினியின் தந்தை சங்கரநாராயணன் காலமானார். அந்த துக்க நிகழ்வுக்காக பரோலில் வெளியே வந்திருந்தார் நளினி. அப்போது அவர் அளித்த பேட்டியின்போது, 25 ஆண்டுகாலமாக நான், என் கணவர் மற்றும் 5 சகோதரர்கள் சிறையில் இருக்கிறோம். நாங்கள் எந்த ஒரு குற்றமும் செய்யாதவர்கள். இதை நம்புவதும் நம்பாமல் இருப்பதும் உங்கள் விருப்பம்.
எங்களுடைய யாருடைய கையும் யாருடைய ரத்தத்தாலும் நனைக்கப்பட்டது அல்ல. ராஜிவ் காந்தி குள்ளமா, கருப்பா, வெள்ளையா, சிவப்பா என்று கூட தெரியாத அப்பாவிகள் நாங்கள்.
எனக்கும் ஒரு மகள் இருக்கிறாள். அவளுக்கும் 24 வயதாகிவிட்டது. அவள் ஏன் எங்களைப் பிரிந்திருக்க வேண்டும்? முதலமைச்சர் அவர்கள் எங்கள் 7 பேரையும் நிச்சயம் விடுதலை செய்வார் என நம்பிக்கையோடு வாழ்கிறோம் என்று கூறியிருந்தார்.
அவரது நம்பிக்கை இன்று பலிக்கப் போகிறது. முதல்வராக அப்போது இருந்தவர் ஜெயலலிதா. அவர் போட்ட அந்த சட்டசபைத் தீர்மானம்தான் இந்த 7 தமிழர்களின் வாழ்க்கையில் புதிய காற்றை புகுத்தப் போகிறது. ஆனால் இதைப் பார்க்க ஜெயலலிதா இன்று இல்லை. ஜெயலலிதா வழி வந்த அரசானது உடனடியாக 7 பேரையும் விடுவிக்கும் என்ற நம்பிக்கையில் உலகத் தமிழர்கள் காத்துள்ளனர்.