''கேப்டன் விஜயகாந்த்'' அணி என்றெல்லாம் சொல்ல முடியாது... நல்லக்கண்ணு நச்
கோவை: மக்கள் நலக்கூட்டணியை விஜயகாந்த் சந்தித்து தொகுதி பங்கீடு செய்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இக்கூட்டணியை விஜயகாந்த் கூட்டணி என்று அவரும் கூறவில்லை. நாங்களும் கூறவில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு கூறியுள்ளார்.
இந்த தேர்தலில் அதிமுகவுக்கும் மக்கள் நல கூட்டணிக்கும் தான் போட்டி,திமுக, அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் ம.ந.கூட்டணியும் தேமுதிகவும் இணைந்து தேர்தலை சந்திக்கின்றன. அந்தக் கூட்டணி இனி ‘கேப்டன் விஜயகாந்த் கூட்டணி' என அழைக்கப்படும் என வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் கூறினர்.
இதனை பலரும் விமர்சித்த நிலையில், கேப்டன் விஜயகாந்த் அணி என்று அழைப்பதை ஏற்க மறுத்துள்ளார் மூத்த தலைவர் நல்லக்கண்ணு.
சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட காரணத்தால் உடுமலையில் சங்கர் கடந்த வாரம் ஆணவக்கொலை செய்யப்பட்டார். இவரது மனைவி கவுசல்யாவை கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கவுசல்யாவை சந்திப்பதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாநிலத் தலைவருமான ஆர்.நல்லக்கண்ணு, இன்று கோவை அரசு மருத்துவமனைக்கு வந்திருந்தார்.
பாதிக்கப்பட்ட கவுசல்யாவுக்கு இயக்கத்தின் சார்பில் ரூ.30 ஆயிரம் நிதியுதவி அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நல்லக்கண்ணு, சட்டசபைத் தேர்தலில் ஆளும் அதிமுகவை எதிர்க்க வலுவான கூட்டணி அமைந்துள்ளது என்றார். அதிமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதே எங்களின் முக்கிய வேலை என்றும் தெரிவித்தார்.
சட்டசபைத் தேர்தலில் அதிமுகவிற்கும் மக்கள் நலக்கூட்டணிக்குமே போட்டி என்று கூறிய நல்லக்கண்ணு, தேமுதிகவும் இணைந்துள்ளதால் மக்கள் நலக்கூட்டணியின் பலம் அதிகரித்துள்ளது என்றார்.
மாற்றுக் கொள்கையை முன்னிலைப்படுத்தி, ஊழல், மது, ஆணவக் கொலைகள் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு எதிராக இருக்கிறோம். மக்கள் நலக்கூட்டணியை விஜயகாந்த் சந்தித்து தொகுதி பங்கீடு செய்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இக்கூட்டணியை விஜயகாந்த் கூட்டணி என்று அவரும் கூறவில்லை. நாங்களும் கூறவில்லை என்று தெரிவித்தார்.
4 சுற்று பிரச்சாரத்தை முடித்து, தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளோம். தேமுதிக இணைந்துள்ளதால் அதில் எவை சாத்தியம் என்பதன் அடிப்படையில் அடுத்த தேர்தல் அறிக்கை வெளியிடுவோம். இலவசங்களைக் கொடுத்து வாக்குகளைப் பெற்றுவிடலாம் என்பதை அனுமதிக்கக்கூடாது.
ரூ.29 ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கிறது என்பதற்காக மதுவை ஏற்றுக் கொள்ள முடியாது. மதுவினால் கிடைக்கும் வருமானத்தை வைத்து இலவசங்களை கொடுக்கின்றனர். வருமானம் வருகிறது என்பதற்காக மக்களை குடிகாரர்கள் ஆக்கக் கூடாது
பலமுனைப் போட்டியால் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு அமைந்துவிடும் என்பது உண்மையல்ல. எங்கள் கூட்டணிதான் வலுவடைந்துள்ளது. எங்களுக்கும், அதிமுகவுக்கும்தான் போட்டி என்றும் நல்லக்கண்ணு கூறினார்.
கிரானைட் கொள்ளை, மணல் கொள்ளை என அதிமுக ஆட்சியில் ஊழல் மலிந்து விட்டது என்று குற்றம் சாட்டிய அவர், திமுகவும் ஊழல் கட்சிதான் என்றார். இரண்டு கட்சிகளையும் ஆட்சிக்கு வர விடக்கூடாது என்று தெரிவித்த நல்லக்கண்ணு, தமாகாவிற்கும் மக்கள் நலக்கூட்டணி அழைப்பு விடுத்துள்ளது என்று தெரிவித்தார்.
முன்னதாக அவர், சாதி ஆணவக் கொலைகள் தமிழ்நாட்டுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளன. பெரியார், அம்பேத்கர், சிங்காரவேலர் போன்றோர் உருவாக்கிய சமூகத்தில் சாதியின் பெயரால் அழிவை ஏற்படுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது. காதலித்து திருமணம் செய்து கொண்ட காரணத்துக்காக 8 மாதங்கள் கழித்து ஆணவக் கொலையை நிகழ்த்தியுள்ளனர் . இந்த உயிரிழப்பு காவல்துறையின் காலதாமதத்தினால் ஏற்பட்ட விளைவு என்று கூறினார்.
தமிழகத்தில் சங்கரின் படுகொலை ஆணவக் கொலைகள் பட்டியலில் 81வது சம்பவம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுத்து நிறுத்த தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும். கொலைக்கு காரணமானவர்களையும், பின்புலத்தில் உள்ள ஆதிக்க அமைப்புகளையும் அடையாளம் காண வேண்டும் என்று நல்லக்கண்ணு தெரிவித்துள்ளார்.